Monday, January 22, 2018

105. மார்க்கோ போலோ அருங்காட்சியகம், வெனிஸ், இத்தாலி

http://www.vallamai.com/?p=82926

முனைவர் சுபாஷிணி
மார்க்கோ போலோ என்ற பெயர் இன்று வணிக நிறுவனங்கள் சில தமக்குச் சூட்டிக் கொண்ட பெயர்களாக உள்ளன. சுற்றுலாத்துறை, உயர்தர ஆடைகள் என சில வணிக நிருவனங்கள் மார்க்கோ போலோவின் பெயரைத் தாங்கி செயல்படுவதை நாம் அறிந்திருப்போம். அந்தப் பெயருக்கு உரிய மார்க்கோபோலோ பற்றிய செய்திகளோடு இந்த அருங்காட்சியகப் பதிவு அமைகின்றது.
1
மார்க்கோ போலோ கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வணிகர். இவர் பிறந்து வளர்ந்தது இத்தாலியின் அழகு மிகு நகரமான வெனிஸ் நகரில். ஒரு வணிகராக உலகை வலம் வந்தவராக அறியப்பட்டவர் இவர். தன் சமகாலத்து ஏனைய கடலோடிகளை விட மார்க்கோ போலோ பல வகைகளில் சிறப்பித்துக் கூறப்படுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. இவரது பயணத்தில் 24 ஆண்டுகள் முழுமையாக ஆசிய கண்டத்திலேயே தன் வாழ்க்கையைச் செலவழித்திருக்கின்றார். அதுமட்டுமன்றி இவரது பயணக்குறிப்புக்கள் இன்று நம்மில் பலருக்கு ஐரோப்பா மட்டுமன்றி ஆசிய நாடுகளின் வரலாற்றின் சில பகுதிகளை அறிந்து கொள்ள உதவுவனவாக அமைந்துள்ளன எனலாம். மங்கோலிய மாவீரன் குப்ளை கான் தன் ஆளுமைக்குக் கீழ் வைத்திருந்த சீனாவிற்கு வருகை தந்து அங்கு குப்ளை கானின் விருந்தினராகவும் பல ஆண்டுகள் இருந்தார் என்பது மார்க்கோ போலோவுக்குள்ள தனிச்சிறப்பு.
மார்க்கோபோலோ பிறந்த இத்தாலியின் வெனிஸ் நகரம் ஐரோப்பாவின் வணிக மையமாகத் திகழ்ந்த காலமது. 1254ம் ஆண்டு இவர் பிறந்தார். இவரது தந்தையாரும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் கூட வணிகத்திற்காகச் செல்வது என்று மட்டுமல்லாது நாடுகளைச் சுற்றிப்பார்த்து வருவதை இயல்பாகக் கொண்டிருந்தனர். இவர்கள் குடும்பத்தினருக்கு கான்ஸ்டண்டினோப்பல் (Constantinople), அதாவது இன்றைய துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் ஒரு வர்த்தக அலுவலகம் இருந்தது. மார்க்கோபோலோவுக்கு 15 வயது இருக்கும் போது இவரது தந்தையார் நிக்கோலோவும், இவர் சிற்றப்பா மாஃபியோவும் ஒன்பது ஆண்டுகள் கிழக்கு நோக்கி அவர்கள் சென்றிருந்த பயணத்தை முடித்துக் கொண்டு வெனிஸ் திரும்பியிருந்தனர். இவ்வகை குடும்பப்பின்னணி மார்க்கோபோலோவிற்கு வணிகப் பயணங்களைப் பற்றிய இயல்பான ஒரு அறிமுகத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்தியிருந்தது.
3
ஒன்பது ஆண்டுகள் பயணத்திற்குப் பின்னர் வீடு திரும்பிய மார்க்கோபோலோவின் தந்தையும் சிற்றப்பாவும் ஆசிய கண்டத்தை நோக்கிய பயணத்தைத் திட்டமிட்டனர். இம்முறை ஆசியாவை நோக்கிய பயணமாக இது அமைந்தது. ஆசியப்பயணத்தைத் தொடங்கிய போதே இவர்களுக்குப் பயணம் நிறைவளிப்பதாக அமைந்தது. செங்கிஸ்கானின் மகன் பர்கா கானின் அரண்மனைக்குச் சென்று அங்கு இவர்கள் கொண்டு வந்திருந்த விலையுயர்ந்த ஆபரணங்களைக் காட்டி அவற்றை நல்ல லாபத்திற்கு விற்றனர். அந்தக் காலகட்டத்தில் அப்பகுதியில் போர் மூண்டது. பர்கா கானின் உதவியுடன் அங்கேயே தங்கியிருந்தனர். அந்த வேளையில் இவர்கள் தாத்தார் மொழியைக் கற்றனர். இது இன்றைய ரஷ்யாவின் ஒரு பகுதி. அக்காலகட்டத்தில் செங்கிஸ்கான் கைப்பற்றிய பல பகுதிகள் அடங்கிய பேரரசுக்குள் அடங்கிய ஒரு பகுதி எனலாம். தாத்தார் மொழியையும் பண்பாட்டையும் மார்க்கோ போலோ குடும்பத்தினர் கற்றுக் கொண்டதால் இவர்கள் பயணம் மேலும் எளிதானது. அப்போது சீனாவையும் மங்கோலியப் பேரரசு கைப்பற்றியிருந்தது அதனை குப்ளை கான் ஆட்சி செய்துகொண்டிருந்தார். போலோ சகோதரர்களுக்குத் தாத்தார் பண்பாட்டு அறிமுகம் இருந்தமையால் குப்ளை கானை சென்று காணும்படி சிலர் தூண்டவே, இவர்கள் குப்ளை கானின் அரசவைக்குச் சென்றனர்.


குப்ளை கானுக்கு ஐரோப்பாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவல் இருந்தது. தாத்தார் மொழி தெரிந்த போலோ சகோதரர்களைச் சந்தித்தபோது மேலும் ஐரோப்பாவை அறிந்து கொள்ள இது வாய்ப்பாகும் என அவர் எண்ணினார். மார்க்கோ போலோவின் தந்தையையும் சிற்றப்பாவையும் தனது தூதுவர்களாக நியமித்து வாட்டிக்கன் நகருக்குச் சென்று அங்கு போப்பை சந்தித்து தனக்கு 100 கிறிஸ்துவ பாதிரிமார்களையும், விஞ்ஞானிகளையும் அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டார் குப்ளை கான். நிக்கோலோவும் மாஃபியோவும் குப்ளை கான் கொடுத்த தங்கத் தட்டில் தகவல் பொறித்த ஆவணத்தையும், பயணத்தில் பாதுகாப்பிற்காகக் கொடுத்த சான்றிதழையும் எடுத்துக் கொண்டு 1269ம் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது 1271ம் ஆண்டில் இவர்கள் மீண்டும் குப்ளை கானைச் சந்திக்க வெனிஸிலிருந்து புறப்பட்டனர். அப்போது 17 வயது நிரம்பிய மார்க்கோ போலோவையும் தம்முடன் அழைத்துக் கொண்டனர். இப்பயணம் இவரது வாழ்க்கையின் முதல் பயணம் மட்டுமல்லாது முக்கியப் பயணமாகவும் அமைந்தது. குப்ளை கானின் அரசவையில் இவர்களுக்கும் இவர்கள் உடன் வந்த பாதிரிமார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மன்னரின் அரண்மனையிலேயே இவர்கள் தங்கினர் என்றும் 25கிமீ தூர அளவிலான வனத்தில் மன்னர் தன் ஓய்வு நாட்களைக் கழித்ததைப் பற்றியும் மார்க்கோ போலோ தன் குறிப்புக்களில் எழுதியிருக்கின்றார். வெனிஸிலிருந்து குப்ளை கான் அரண்மனைக்கு வந்தவர்கள் அங்கேயே 17 ஆண்டுகள் தங்கியிருந்தனர் என்றும் இக்குறிப்புக்களால் அறிய முடிகின்றது. நில மார்க்கமாகப் பட்டுப் பாதை வழியாக முதலில் சென்று, பின்னர் கடல்மார்க்கமாக சீனாவின் ஷங்டு நகரிலிருந்து மீண்டும் தமது பயணத்தை மார்க்கோ போலோவின் குழு தொடங்கியது.
கடல் பயணத்தின் போது இவர்கள் இந்தியாவின் தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளில் இறங்கி அங்கு வணிகம் செய்தனர் என்றும் பின்னர் கேரள கடற்கரை துறைமுகப் பகுதிகளிலும் மிளகு போன்றவற்றை வாங்கிக் கொண்டு வெனிஸ் நகரம் திரும்பினர் என்றும் இவரது நூல் குறிப்புக்களும் வரைபடங்களும் ஓவியக் குறிப்புக்களும் குறிப்பிடுகின்றன. ஏறக்குறைய 20,000 கிலோமீட்டர் தூரம் மார்க்கோ போலோவின் ஆசியப் பயணம் அமைந்தது. ஒரு வணிகராக, நாடோடியாக, கடலோடியாக, இவர் தன் வாழ்க்கையை, பயணத்திலேயே பல ஆண்டுகளைக் கழித்திருக்கின்றார்.
4
தனது 24 ஆண்டுகள் பயணத்தை முடித்து வெனிஸ் திரும்பிய மார்க்கோபோலோ, வெனிஸ் நகரில் அப்போது ஆட்சி செய்த அரசால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 1299ம் ஆண்டு விடுதலை பெற்று சிறையிலிருந்து வெளிவந்து வெனிஸ் நகரில் தன் வர்த்தகத்தொழிலை விரிவாக்கினார். அங்கேயே ஒரு பெண்ணை மணந்து அவர்களுக்கு 3 குழந்தைகளும் பிறந்தனர். 1324ம் ஆண்டு தனது 70ம் வயதில் இவர் காலமானார். வெனிஸ் நகரின் சான் லொரேன்சோ தேவாலயத்தில் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மார்க்கோ போலோவின் இல்லம் இன்று ஒரு அருங்காட்சியகமாக செயல்படுகின்றது. உலகின் பல நாடுகளில் உள்ள பெரிய அருங்காட்சியகங்களில் இத்தாலிய அரசு தற்காலிக மார்க்கோ போலோ கண்காட்சியையும் ஏற்படுத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
5
மார்க்கோ போலோவின் நூல் The Travels of Marco Polo அல்லது The Description of the World இவரது இளம் வயது பயணக் குறிப்புக்களுடன் தொடங்குகின்றது. இன்றும் முக்கிய வரலாற்றுத் தகவல்களை வழங்கும் முக்கிய ஆவணமாக இந்த நூல் திகழ்கின்றது. மார்க்கோ போலோ ஐரோப்பாவிலிருந்து ஆசிய பயணம் மேற்கொண்டு சீனாவை அடைந்த முதல் ஐரோப்பியர் அல்ல. ஆயினும், மிக விரிவான பயணக் குறிப்பை விட்டுச் சென்ற ஒரு பயணி என்ற சிறப்புதான் அவரது புகழுக்குக் காரணமாக இருக்கின்றது. இவரது பயணக் குறிப்புக்களையும் வரைபடங்கள் மற்றும் அவற்றின் குறிப்புக்களையும் வாசித்து, அதனால் ஈர்க்கப்பட்டு தான் கிறிஸ்டஃபர் கொலம்பஸ் போன்ற கடலோடிகள் புதிய நாடுகளைத் தேடித் தங்கள் தேடும் பயணத்தைத் தொடங்கினர் என்பதில் சந்தேகமில்லை.

Friday, January 5, 2018

104. கோத்தே (Goethe) அருங்காட்சியகம், டூசல்டோர்வ், ஜெர்மனி

http://www.vallamai.com/?p=82556

முனைவர் சுபாஷிணி
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று. 
(திருக்குறள்)
உலகில் மனிதர்கள் பிறக்கின்றோம். வாழ்கின்றோம். மறைகின்றோம். மனிதன் தான் வாழும் இப்பூமிக்கு தன் வாழ்வின் பயனாக விட்டுச் செல்லும் படைப்புக்கள் தான் உலகில் நிகழும் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வித்தாகின்றன. உலகுக்கு நற்காரியங்களைச் செய்து நன்மைகள் படைத்துச் செல்வோரால் தான் பூமி செழிக்கின்றது. அறிவியல் கண்டுபிடிப்புக்களையும், கலைப்படைப்புக்களையும், இலக்கியப் படைப்புக்களையும், அரசியல் நகர்வுகளையும் முன்னெடுத்துச் செல்வோரே இவ்வுலகம் மேன்மையை நோக்கிச் செல்ல உதவும் கருவிகளாக இயங்குகின்றனர். அத்தகையோரில் ஒருவர் தான் கோத்தே (Johann Wolfgang von Goethe).
as1
யோஹான் வோல்வ்காங் கோத்தே 1749ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ம் நாள் ஜெர்மனியின் ப்ராங்பர்ட் நகரில் பிறந்தவர். கவிஞர், இலக்கியவாதி. தத்துவ அறிஞர், அரசியல் பிரமுகர், அறிவியல் ஆய்வறிஞர், தாவரவியல் அறிஞர் என்ற பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர். ஜெர்மனி மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவற்றில் பரவலாக அறியப்பட்டவர் இவர். ஆம், கோத்தே கல்விக்கழகம் (Goethe Institute) என்ற பெயரில் உலக நாடுகள் பலவற்றில் ஜெர்மானிய மொழி பாடங்களை நடத்தும் நிறுவனத்தைப் பற்றி பலர் அறிந்திருக்கலாம். மொழித்துறை என்று மட்டுமல்லாது உலகளாவிய அளவில் இலக்கியப் படைப்புக்களை அங்கீகரிக்கும் செயல்பாடுகளைச் செயல்படுத்தி வரும் ஒரு நிறுவனமாகவும் Goethe Institute செயல்பட்டு இன்று செயல்பட்டு வருகின்றது.
as2
தனது 25வது வயதிலேயே இளம் படைப்பாளியாக அறிமுகம் பெற்று சிறப்பு பெற்றவர் கோத்தே. இவரது முதல் நாவல் The Sorrows of Young Werther இன்றளவும் இலக்கிய உலகில் மிக உயர்வாகப் பேசப்படும் ஒரு படைப்பாகத் திகழ்கின்றது.
ஆரம்பக் காலத்தில் கோத்தே லைப்ஸிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சட்டத்துறை பட்டதாரியாக 1768ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர். சட்ட நுணுக்கங்களை அறிந்ததில் இருந்த நாட்டம் போலவே கவிதை எழுதுவதிலும் அவருக்குத் தீவிர நாட்டம் இருந்தது. லைப்ஸிக் பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்து பிரான்சின் எல்ஸாஸ் பகுதியில் உள்ள ஸ்ட்ராஸ்புர்க் பல்கலைக்கழகத்தில் இவர் கல்வியைத் தொடர்ந்தார். எல்ஸாஸ் நகரம் அவருக்கு விரிவான உலகத்தைக் காட்டியது. இவரது இலக்கியப் படைப்புக்கள் இக்காலகட்டத்தில் செம்மை பெற்றன. பல கவிதைகளை எழுதினார். பல கவிஞர்களின் நட்பும் இவருக்கு ஏற்பட்டது.
வைமாருக்குச் சென்று அங்கே அந்த நகரத்தின் பிரபுவினது அமைச்சகத்தில் உயர் நிலை அதிகாரியாகப் பணியாற்றினார். உலகப்பிரசித்தி பெற்ற யேனா பல்கலைக்கழகத்தைச் சீரமைக்கும் முயற்சியில் பங்கெடுத்து கொண்டு சீரமைப்புக்குத் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தினார். வைமார் நகரின் தாவரப் பூங்கா அமைப்பில் இவரது பங்களிப்பு மிகப்பெரிது. இன்று இந்தப் பூங்கா ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருக்கும் புராதனச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றது என்பதும் இவரது சிறப்பை உலகுக்கு எடுத்துக் கூறும் சான்றாக அமைகின்றது.
as3
கோத்தே அவர்களின் மிகப்பெரிய பங்களிப்பு ”தாவரங்களின் பரிணாமம்” ( Metamorphosis of Plants) என்ற தலைப்பில் அவர் எழுதி வெளியிட்ட தாவரவியல் ஆய்வு நூலாகும். இத்தாலியில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு வந்ததன் பின்னணியில் இந்த நூலை எழுதி 1788ம் ஆண்டு வெளியிட்டார். தாவரவியல் அறிவியலில் ஈடுபட்டதைப் போல நிறங்களைப் பற்றிய ஆய்விலும் உடற்கூறு ஆய்விலும் இவருக்கு நாட்டமிருந்தது. இத்துறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றார். வைமார் நகரில் இவர் நாடக சபையின் இயக்குநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் வழி அவருக்கு ஜெர்மனியின் மிகப் பிரசித்ஹ்டி பெற்ற கவிஞராகிய ஃப்ரெடெரிக் ஷில்லர் அவர்களது நட்பு கிட்டியது. இந்த நட்பு நெடுங்காலம் நீடித்தது. வைமார் அரும்பொருள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள கல்லறையில் கோத்தேயின் சவப்பெட்டிக்குப் பக்கத்தில் ஷில்லரின் சவப்பெட்டி உள்ளது என்பதைக் கவனிக்கும் போது இந்த இரு பெரும் ஆளுமைகளும் கொண்டிருந்த நல்ல நட்பை நாம் உணர முடியும்.
கோத்தே அவர்கள் தனது நெடுநாள் காதலியான கிறிஸ்டினாவை 1806ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 18 ஆண்டுகள் இணைந்தே வாழ்த்து பின்னர் திருமணம் முடித்துக் கொண்டனர். திருமணத்திற்கு முன்னரே இவர்களுக்கு 5 குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் 4 குழந்தைகள் இறந்து போயினர்.
1793க்குப் பிறகுத் தனது வாழ்க்கையை முழுமையாக இலக்கியப் பணிகளுக்காகவே அர்ப்பணித்தார் கோத்தே. பல துறைகளில் சீரிய பணியாற்றிய இவர் 1832ம் ஆண்டு வைமார் நகரில் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.
உலக அரங்கில் ஜெர்மனிக்குச் சிறப்பு சேர்க்கும் கோத்தே அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஜெர்மனியின் டூசல்டோர்வ் நகரில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:
Jacobistrasse 2, Schloss Jägerhof, 40211 Düsseldorf . இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை
http://www.goethe-museum.com/de என்ற இணையமுகவரியில் காணலாம்.
as4
இன்று நாம் காணும் கோத்தே அருங்காட்சியகம், பெரூசிய பேரரசுக்கு (ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் தொடங்கிப் பரவலான பகுதிகளை உள்ளடக்கிய பேரரசு இது) சொந்தமான ஒரு அரண்மனை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் புகழ்பெற்ற பதிப்பாசிரியர்களுள் ஒருவரான ஆண்டோன் கிப்பன்பெர்க் சேகரித்த கோத்தேயின் படைப்புக்கள், சேகரிப்புக்கள் அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சேகரங்கள் ஒவ்வொன்றும் கோத்தேயின் வாழ்க்கை, அவர் மேற்கொண்ட பயணங்கள், ஈடுபட்ட ஆய்வுகள், அரசில் அவர் ஆற்றிய பணி, எழுத்துலகில் அவர் எழுதி வெளியிட்ட படைப்புக்கள், அறிவியல் ஆய்வுகள், அவரது சிறந்த படைப்புக்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
as5
இங்குள்ள அறைகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக அவரது ஆரம்பக்கால வாழ்க்கையின் நிகழ்வுகளைச் சொல்லும் நிகழ்வுகள் கொண்ட அறை, வைமார் நகரில் அவரது வாழ்க்கை நிகழ்வுகள், இத்தாலி பயணம் அளித்த அனுபவங்கள் சொல்லும் ஆவணங்கள் கொண்ட அறை என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் அவரது எழுத்துப்படைப்புக்கள் கண்ணாடி அலமாரிகளுக்குள் வைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் கோத்தே அவர்களின் சேகரிப்புக்கள், மற்றும் அவரது ஆய்வுப்பணி, இலக்கியப்பணி தொடர்பான ஏறக்குறைய 35,000 அரும்பொருட்கள் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தின் நூலகத்தில் 25,000 நூல்களும், ஏறக்குறைய 35,000 ஆவணங்களும் பாதுகாக்கப்படுகின்றன.
ஜெர்மனி உலகுக்குப் பல அறிஞர்களையும், தத்துவ ஞானிகளையும், இசைக்கலைஞர்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும் இலக்கியவாதிகளையும் வழங்கிய நாடு. அத்தகைய அறிஞர்களுள் ஒருவராய் உலகில் ஜெர்மனியின் புகழை உயர்த்தும் ஆளுமையாகக் கோத்தே அவர்கள் திகழ்கின்றார்கள். உலக நாடுகளில் 159 இடங்களில் இன்று கோத்தே கல்விக்கூடம் செயல்பட்டு வருகின்றது. உலகின் பல நாடுகளில் ஜெர்மானிய மொழியைப் பயிற்றுவிக்கும் கல்விக்கூடமாகவும், கலை, இலக்கிய பண்பாட்டு புரிதல்களுக்காகவும் இந்த அமைப்பு பங்காற்றி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது!