Wednesday, October 4, 2017

99. செக்போயிண்ட் சார்லி அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி

http://www.vallamai.com/?p=80318

முனைவர் சுபாஷிணி
ஜெர்மனியின் வரலாற்றில் பல முக்கிய தேதிகள் நீண்ட பட்டியலாகவே உள்ளன. மிகப் பல அரசியல் மாற்றங்களைச் சந்தித்த நாடு ஜெர்மனி என்பது உண்மையே. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏனைய உலக நாடுகளின் மத்தியில் கிடைத்த பிரபலம் போல ஜெர்மனிக்குக் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். அப்படி மிக முக்கியமான தேதிகளில் ஒன்றாகத் திகழ்வது ஆகஸ்டு 13, 1961ம் ஆண்டு. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் ஜெர்மனியைப் பாதுகாப்பதில், குறிப்பாக அதன் அரசியல் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மோதலின் விளைவாக உருவானதுதான் 1961ம் ஆண்டு பெர்லின் பிரச்சனை. இதுவே ஜெர்மனியின் கிழக்கு ஜெர்மனிக்கும் மேற்கு ஜெர்மனிக்கும் இடையே பெர்லின் மக்களைச் சுவர் அமைத்துப் பிரித்து வைத்த அரசியல் நிகழ்வினைக் குறிப்பிடும் ஒரு நாளாக அமைகின்றது.
as1
2ம் உலகப்போருக்குப் பின்னர் கூட்டு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்சு, சோவியத் யூனியன் ஆகிய நான்கு நாடுகளும் ஜெர்மனியைத் தங்கள் ஆளுமைக்குள் அடக்கி வைக்கும் வகையில் அதன் மையமாகிய பெர்லின் நகரை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்யும் முறையை உருவாக்கின. 1948ம் ஆண்டில் சோவியத் பகுதிக்குள் அமெரிக்கா செல்வதற்குத் தடைகளை சோவியத் யூனியன் ஏற்படுத்தியது. அந்த நிலையில் கிழக்கு பெர்லின் மக்களுக்கு உதவும் வகையில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தரை வழி செல்ல இயலாததால், விமானங்களின் வழி கிழக்கு பெர்லின் மக்களுக்கு உணவும் அடிப்படைத் தேவைக்கான பொருட்களையும் வழங்கத் தொடங்கின. பின் 1949ம் ஆண்டு சோவியத் யூனியன் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு உதவிப் பொருட்களைத் தரை வழியே கிழக்கு பெர்லின் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் பாதையைத் திறந்தது.


1950 வாக்கில் சோவியத் யூனியன் மேற்கிலிருந்து கிழக்கு ஜெர்மனிக்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் பொருட்டு தடைகளை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. அரசியல் நிலைமைகளின் காரணமாக பெர்லின் மக்கள் பட்ட இன்னல்களுக்கு அளவே இல்ல எனலாம். 1949க்கும் 1961க்கும் இடையில் கிழக்கு பெர்லினிலிருந்து தப்பித்து மேற்கு ஜெர்மனிக்குச் சென்றோரின் எண்ணிக்கை இரண்டரை மில்லியன் மக்கள் தொகை ஆகும்.
அகஸ்டு 13ம் நாள், 1961ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி தன்னை மேற்கு ஜெர்மனியிலிருந்து பிரித்துக் கொள்ளும் வகையில் பெர்லின் சுவரை எழுப்பியது. 155 கி.மீ. நீளம் கொண்ட சுவர் இது. கிழக்கையும் மேற்கையும் அரசியல் ரீதியாகப் பிரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுவர் இது. கருங்கல்லால் மட்டுமன்றி இரும்புக் கம்பிகளும் முள் வேலிகளும் பொருத்தப்பட்ட மிக உறுதியான சுவராக இந்த பெர்லின் சுவரை சோவியத் யூனியன் கையில் இருந்த கிழக்கு பெர்லின் அரசு உருவாக்கியது.
சுவர் கொண்டு எழுப்பினாலும் ஒரு நுழைவுப் பாதை இந்தச் சுவற்றுப் பகுதியில் உருவாக்கப்பட்டது. அந்த வகை எல்லைக்காவல் நிலயம் தான் செக்போயிண்ட் சார்லி (Checkpoint Charlie). இந்தப் பாதை வழியாக ஒருவர் கால்நடையாகவும், வாகனத்தின் வழியாகவும் கிழக்கிலிருந்து மேற்கிற்கும் மேற்கிலிருந்து கிழக்கிற்கும் வந்து செல்லலாம். சார்லி (Charlie) என்பது ஒரு மறைமுகக் குறியீடு (code word). நாட்டோவினால் பயன்படுத்தப்பட்ட ஒரு ரகசியக் குறியீட்டுச் சொல்லை பிரதிபலிப்பது இச்சொல்.
as3
செக்போயிண்ட் சார்லி குறிப்பிடத்தக்க சில ஆங்கில, ஜெர்மானிய திரைப்படங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஜேம்ஸ் போண்ட் படமான ஆக்டபஸி திரைப்படமும் அதில் ஒன்று. Cafe Adler (Eagle Café) என்ற திரைப்படமும் இந்தப் பகுதிக்கு எதிராக உள்ள ஒரு உணவகத்தில் அமர்ந்தவாறு நிகழும் சில செய்திகளைச் சொல்லும் படம். இந்த உணவகம் இன்றும் இருக்கின்றது. 2013ம் ஆண்டு நான் பெர்லினுக்குச் சென்றிருந்தபோது இந்த உணவகத்தில் அமர்ந்தவாறு செக்போயிண்ட் சார்லியைப் பார்த்துக் கொண்டிருந்த நிமிடங்கள் மனதில் பசுமையாக இருக்கின்றன.
இந்த பெர்லின் சுவர் பல மரணங்களைப் பார்த்துள்ளது. மக்களின் சோக வாழ்க்கையை பெர்லின் சுவர் தன்னுள்ளே உறிஞ்சிக்கொண்டது என்று தான் குறிப்பிட வேண்டும்.
as4
1990ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் நாள் செக்போயிண்ட் சார்லியின் கதவுகள் முழுமையாகத் திறக்கப்பட்டன. இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது தொடர்ச்சியாக இரு தரப்பிலிருந்தும் ஜெர்மானிய மக்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த மனித உரிமைக்கு எதிரான இந்த நடவைக்கைகளுக்கான எதிர்குரலே. ஜூன் மாதம் இக்கதவுகள் திறக்கப்பட்டாலும் எல்லைச் சோதனைகள் அக்டோபர் 2ம் தேதி வரை தொடர்ந்து கொண்டிருந்தன. 2ம் தேதி இரவு பெர்லின் சுவர்கள் ஜெர்மானிய மக்களால் தகர்த்து உடைக்கப்பட்டது. மக்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்துச் சுவர்களைத் தகர்த்து உடைத்தனர். கிழக்கும் மேற்கும் ஜெர்மானிய மக்களின் உறுதியால் ஒன்றிணைந்தது.
​1990ம் ஆண்டில் பெர்லின் சுவற்றை உடைப்பதற்கு முன்னரே இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு விட்டது. ​முதலில் Dr. Rainer Hildebrandt என்பவர் அக்டோபர் 19ம் தேதி 1962ம் ஆண்டு உடைபட்டுக் கிடந்த பெர்லின் சுவரின் கற்களின் மேல் சில வாசகங்களை எழுதி வைத்தார். இது அப்பகுதியில் மக்களின் வலியைப் பதிவாக்கும் ஒரு அருங்காட்சியகம் தேவை என்ற சிந்தனையை எழுப்பியது. தற்சமயம் இந்த செக்பாயிண்ட் சார்லி அமைந்திருக்கும் அருங்காட்சியகமானது1963ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 13 August Consortium என்ற அமைப்பு இந்த அருங்காட்சியகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது. 13ம் தேதி என்பது பெர்லின் சுவர் எழுப்பப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் அமைந்த ஒரு அமைப்பாகும். இதன் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர் Alexandra Hildebrandt அதாவது முதலில் கண்காட்சியை உருவாக்கிய Dr. Rainer Hildebrandt அவர்களின் மனைவியாவார். பெர்லினின் நகரிலுள்ள 100க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களும் மிக அதிகமான வருகையாளர்களால் வந்து பார்த்துச் செல்லும் அருங்காட்சியகங்களில் ஒன்று என்ற சிறப்பு கொண்டது இந்த அருங்காட்சியகம்.
இந்த அருங்காட்சியகத்தின் கண்காட்சியில் பெர்லின் சுவர் எழுப்பப்படுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் நிகழ்வுகளைக் குறிப்பிடும் ஆவணங்களும், அதில் ஈடுபட்ட மனிதர்களைப் பற்றிய செய்திகளும், நாட்டோ கூட்டு நாடுகளைப் பற்றிய செய்திகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 13, 1961ம் ஆண்டு பெர்லின் சுவர் அமைக்கப்பட்ட நிகழ்வு, அதன் தொடர்ச்சியாக அமுலுக்கு வந்த சட்டங்கள், நடைபெற்ற துர்சம்பவங்கள் ஆகியன பற்றிய ஆவணங்களும் கண்காட்சியில் உள்ளன. 2007ம் ஆண்டு நிரந்தர கண்காட்சிப்பகுதியை இந்த அருங்காட்சியகம் உருவாக்கியது. அதில் நாட்டோவின் (NATO) வரலாற்றைச் சொல்லும் ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்ட்டுள்ளன. உலக அளவில் நாட்டோவின் (NATO) ஆரம்பக்கால வரலாற்றைக் குறிப்பிடும் மிக முக்கிய அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது எனலாம்.
as5
பெர்லின் நிகழ்வுகள் மட்டுமன்றி உலகின் பல பகுதிகளில் அரசியல் அடக்குமுறைகளை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளின் குறிப்புக்களும் ஆவணங்களும் இங்கு உள்ளன. இந்தியாவிலிருந்து காந்தியின் குடும்பத்தார் வழங்கிய 14 ஆவணங்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறுகின்றன என்பதும் ஒரு சிறப்பே.
இந்த அருங்காட்சியகத்தின் முகவரி Friedrichstraße 43-45, 10969 Berlin.
பெர்லின் செல்பவர்கள் தவறாமல் பார்த்து வரவேண்டிய ஒரு வரலாற்று மையம் இது என்பதால் கண்டிப்பாக தங்கள் சுற்றுப்பயணப் பட்டியலில் இதனை இணைத்துக் கொள்ள வேண்டும்.
நிகழ்கால நிகழ்வுகள் வரலாறாக மாற்றம் பெறுகின்றன. வன்முறையை இல்லாதாக்கி அன்பை மேம்படுத்தி மனிதக் குலம் வாழ்வதே நல்வாழ்க்கையாக அமையும்.
சரி.. அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தைக் காண அழைத்துச் செல்கிறேன். இப்போது செக்போயிண்ட் சார்லி நினைவில் மூழ்கியிருங்கள் !

No comments:

Post a Comment