Friday, September 15, 2017

98. உடைந்த உறவுகள் – அருங்காட்சியகம், சாக்ரெப், குரோய்ஷியா

http://www.vallamai.com/?p=79753

முனைவர் சுபாஷிணி
காதல்.. காதல்.. காதல்..
பழமையைப் போற்றுவதற்கும், மானுடவியல் ஆய்வுகளில் உதவுவதற்கும், தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் அறிவியல் ஆக்கங்களைப் பட்டியலிடவும் மட்டும் தான் அருங்காட்சியகமா? மனித உறவுகளில் உள்ள சில கூறுகளைப் பதிவாக்கி வைக்கவும் அருங்காட்சியகங்கள் வேண்டாமா?
as1
வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் பலர்.
தற்செயலாகச் சந்திக்கும் அவர்களில் யாரோ ஒருவருடன் மனதில் திடீரென ஈர்ப்பு ஏற்பட்டு விடுவதை மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருமே உணர்ந்து அனுபவித்துக் கடந்து வருகிறோம். மனிதர்களின் வாழ்வில் நடக்கும் முக்கிய அம்சங்களான குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடும் நாம், நம் தனி மனித உணர்வுகளின் அதி உயர்வான காதல் உணர்வைப் போற்றி மதிக்காமல் போய்விடுகின்றோமே..
சில வேளைகளில் காதல் தோல்வியைத் தற்கொலையால் பூசிப்பவர்களும் உண்டு. காதல் தோல்வியால் மதுபானம், போதைப்பொருள் என சில தீய பழக்கங்களுக்கு ஆளாகி, தன் நலனையே கெடுத்துக் கொள்பவர்களும் உண்டு. ஒரு சிலரோ, உடைந்து போன காதலுக்கு மரியாதையைச் செலுத்தி விட்டு புதிதாகத் தோன்றியிருக்கும் காதலை வளர்த்தெடுப்பதில் மூழ்கிவிடுபவர்களும் உண்டு. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் காதல் உணர்வுகள் எழுவது இயல்பு. காதல் வயப்பட்டோர் ஏதாவதொரு ஒரு காரணத்திற்காகத் தோல்வியைச் சந்தித்திருப்பதும் உண்டு. அதிலிருந்து மீண்டு வந்து புதிய காதலை ரசித்து வாழ்க்கையைத் தொடர்வதே வாழ்க்கைக்கான வெற்றி. ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த சோகம் மற்றொருவருக்குப் புதிய பாதையைக் காட்டலாமே, என்ற சிந்தனையுடன் உருவாக்கப்பட்டதுதான் குரோய்ஷியா நாட்டின் தலைநகரமான சாக்ரெப்பில் அமைந்திருக்கும் உடைந்த உறவுகள் அருங்காட்சியகம்.


2006ஆம் ஆண்டு இத்தகைய ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் ஏற்படவே அரசு இந்த முயற்சியில் இறங்கியது. அதன் அடுத்த ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு படிப்படியாகப் பல ஆவணங்களும் காட்சிப் பொருட்களும் இங்கு இணைக்கப்பட்டன. இன்றளவும் இணைக்கப்படுகின்றன.
அருங்காட்சியகங்கள் என்றால் பொதுவாக எதனை எதிர்பார்ப்போம்..? சிதிலமடைந்த சுவர்கள், சிற்பங்கள், கற்கள், எலும்புக் கூடுகள், சின்னங்கள், நாணயங்கள் … இப்படித்தானே..?
இங்கே அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் தனி நபர்கள் நன்கொடையாக இந்த அருங்காட்சியகத்திற்கு வழங்கிய சுய அனுபவங்களின் சான்றுகள் தாம். இங்கு உலகம் முழுவதிலிருந்து இத்தகைய பொருட்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. அவற்றை முறையாகக் காட்சிப்படுத்தி குரோய்ஷிய மொழியிலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் இங்கு வைத்திருக்கின்றார்கள்.
இங்குள்ள ஒரு சில சொந்தக் கதை அனுபவங்கள் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
நெதர்லாந்தில் வசிக்கும் பெண்மணி ஒருவர். அவரது ஒரு காலணியும் எதனால் இதனை நினைவுச் சின்னமாக அனுப்பினார் என்ற விளக்கமும் உள்ளது. அதில் அவர் சொல்கிறார்.
“1959ஆம் ஆண்டு. எனக்கு 10 வயது. அவனுக்கு 11 வயது. நாங்கள் இருவரும் மிகுந்த காதலில் இருந்தோம். நாங்கள் இருவரும் வெளியே தனியாகச் சுற்றினோம் என்பதை என் தாயாருக்குச் சொன்ன போது என் காதில் பலமான அடி விழுந்தது. என்னை என் அத்தை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். எனக்கு 15 வயது. மீண்டும் அவனைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. சில மாதங்கள் எங்கள் உறவு இனிமையாகக் கழிந்தது. பின்னர் அவன் ஜெர்மனி சென்று விட்டான். ஆனால் கடிதத் தொடர்பில் இருந்தோம். வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை என உறுதி எடுத்துக் கொண்டோம். ஆனால் எங்கள் தொடர்பு துண்டித்துப் போனது.1998ஆம் ஆண்டு. நான் தொழில் ரீதியாக ஒரு பணியில் இருந்தேன். அச்சமயம் ஒரு வாடிக்கையாளர் வந்து பேசிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களில், அவர் அவன் தான் என அறிந்து கொண்டேன். அவனும் என்னை அடையாளம் கண்டு கொண்டான். தனக்கு முதல் திருமணம் வெற்றியாக அமையவில்லை என்றும் இரண்டாம் திருமணம் செய்திருப்பதாகவும் கூறினான். இனி இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடாது என நான் கூறினேன். அவன் என் நினைவாக நான் அணிந்திருந்த காலணியில் ஒன்றினைக் கேட்க அவனுக்குக் கொடுத்து விட்டேன். பின்னர் யோசித்தேன். அந்த நினைவுகள் மீண்டும் தேவையில்லை. எஞ்சிய இந்த ஒரு காலணியை அருங்காட்சியகத்திற்கு என் வாழ்க்கை நினைவாகக் கொடுக்கின்றேன்.”
..என அவரது காதல் தோல்வி கதை அமைகிறது.
அடுத்த கதை. இதனையும் ஒரு பெண் பிரேசில் நாட்டிலிருந்து எழுதியிருக்கின்றார். கடிதத்தோடு காகிதத்தால் செய்யப்பட்ட திருமண அலங்கார வளையத்தை அனுப்பியுள்ளார்.
“நான் ஒரு எழுத்தாளர். நான் எனது பதிப்பக உரிமையாளரையே மணந்து கொண்டேன். திருமணத்திற்காக இந்த காகித அழகு வளையத்தை இருவருமே செய்தோம். இது முழுக்க முழுக்க காகிதத்தால் மட்டுமே ஆனது. நாங்கள் இருவரும் எழுத்துத் துறையில் இருப்பதால் அதனைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தோம். எங்கள் 5ஆம் ஆண்டு திருமண நாளின் போது அவன் மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டேன். மேலும் ஆராய்ந்த போது அது ஊர்ஜிதமாகியது. அவனிடமிருந்து விலகி விட்டேன். அவன் நினைவுகளும் தேவையில்லை என்பதால் இந்தக் காகித அலங்கார வளையத்தை இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்புகிறேன். ”
.. இது அவரது கதை.
இன்னொரு பெண்மணி.. குரோய்ஷியாவிலேயே இருப்பவர். அவரது திருமண ஆடையை இங்கு வழங்கியதோடு ஏன் என்ற காரணத்தை சில வரிகளில் கூறியிருக்கின்றார்.
as3
“நீண்ட சண்டைகள் எங்களுக்குள் ஏற்பட்டன. அவை தொடர்ந்தன. அவன் தன் பக்க நியாயத்தை மட்டுமே ஓயாது பேசிக் கொண்டிருந்தான். பேசுவதே அதிகம். தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அவன் வேலைக்கும் செல்லவில்லை. திருமணம் முதல் எல்லாமே எனது செலவிலேயே நடந்தது. அவனால் எனக்குக் கடன் தொல்லையும் ஏற்பட்டது. அவனது கடன்களை அடைத்தேன். அவனை வெளியே விரட்டினேன். அவன் நினைவுகளும் வேண்டாம். இந்தத் திருமண கவுனும் வேண்டாம். ”
..இது அவரது வாழ்க்கையில் காதல் ஏற்படுத்திய காயத்தின் சான்று.
இங்குள்ள காதல் தோல்வி சான்றுகள் பெண்கள் அனுப்பியவே அதிகம். இங்கிலாந்தின் லண்டன் நகரிலிருந்து ஆண் ஒருவர் அனுப்பிய காதல் தோல்விக்கான காரணத்தையும் சான்றையும் பார்ப்போமே.
“நான் அவளை முதன் முதலில் டிசம்பர் மாதத்தில் சந்தித்தேன். ஆரம்பத்தில் நட்பாக மட்டுமே எங்கள் உறவு தொடர்ந்தது. ஏனெனில் நான் அப்போது ஒரு காதலிக்காக ஏங்கிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவளிடம் எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவள் ஆஸ்திரேலியாவிலிருந்து படிக்க வந்திருந்தாள். எங்கள் உறவு இனிதே தொடங்கியது. அவள் திரும்பிச் செல்ல வேண்டிய காலம் வந்தது. என்னையும் அழைத்தாள். நான் லண்டனிலிருந்து வரமுடியாது எனக் கூறிவிட்டேன். எங்கள் உறவு முறிந்தது. “
ஏன் முறிந்தது? எதனால் லண்டனிலிருந்து வரமுடியாது என 10 காரணங்களைச் சொல்லி அவளை அனுப்பி வைத்திருக்கின்றார் இந்த ரோமியோ. அந்த 10 காரணங்கள் அடங்கிய பட்டியல் மனதை உறுத்தி வருத்தியிருக்கும் போல. அதனால் அதனை இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவிட்டார்.
இன்னொரு பெண்மணி.. தனது ஒரு வருடக் காதல் அனுபவம் .. பின் ஏற்பட்ட காதல் முறிவு ஆகியவற்றுக்கான காரணத்தை இப்படிக் கூறுகிறார்.
as4
“ஒரு முறை போதைப் பொருளுக்கு அடிமையானவன் மீண்டும் அதிலிருந்து தப்பவே முடியாது. போதைக்கு அடிமையானவன் வாழ் நாள் முழுதும் போதைப்பொருளுக்கு அடிமைதான். ஆனால் முதலில் என் நண்பர்கள் இதனைக்கூறியபோது நான் ஏற்றுக் கொள்ளவில்லை. போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவன் வாழ்க்கையில் மறு வாய்ப்பு வழங்கப்படும் போது மாறிக் கொள்ள மாட்டானா? என் காதல் அவனை மாற்றும் என என் நண்பர்களிடம் வாதிட்டு அவனுடன் காதல் நட்பினைத் தொடங்கினேன். அவன் என்னை அதிகம் காதலித்தான். நானும் அவனை உயிருக்கு உயிராகக் காதலித்தேன். எனக்குச் சிரமம் ஏற்படும் போதெல்லாம் துணையாக இருந்தான். அதனால் என் நண்பர்களிடமிருந்தும் கூட விலகி விட்டேன். நாங்கள் இணைந்து வாழ்க்கையைத் தொடங்கினோம். வியாபாரத்தைத் தொடங்கினோம் . குடும்பம் அமைப்பது பற்றி அதிகமாகப் பேசினோம். ஒருநாள் திடீரென்று அவனிடம் மாறுதலைக் கண்டேன். எனக்குத் தெரியாமல் போதைப் பொருளை உட்கொள்வதை மீண்டும் தொடங்கியிருந்தான். சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. ஆறு மாதங்கள் போராடிப் பார்த்தேன். அவன் மாறவில்லை. நான் அவனிடமிருந்து பிரிந்து வந்து என் வாழ்க்கையைத் தொடர்கின்றேன். அவன் நினைவாகக் போதைப்பொருள் சோதனைக்கருவி ஒன்றினை சான்றாக அனுப்பி, இக்கடிதத்தையும் அனுப்பியிருக்கின்றார். “
இப்படிப் பல பல கதைகள்.. நின்று வாசித்தால் பெருமூச்சு ஏற்படும். ஆனாலும் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் பிறருக்கு புது வாழ்க்கையைத் தொடங்க ஒரு தூண்டுதலாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்துடன் இத்தகைய தகவல்களை அனுப்பியிருக்கும் நல்ல உள்ளங்களை வாழ்த்தத்தான் வேண்டும்.
as5
காதலில் தோல்வி ஏற்பட்டு மனம் வருந்திக் கொண்டிருப்பவர்கள் முதலில் அக்காதலை நினைவூட்டும் எல்லாப் பொருட்களையும் ஒதுக்கி விடுவதே நல்லது. பழைய நினைவுகள் நிகழ்கால வாழ்க்கையைப் பாதிக்க நாமே இடம் கொடுக்கக் கூடாது., ஆக, காதலில் தோல்வி அடைந்தோர் ஏதேனும் நினைவுப் பொருட்கள் வைத்திருந்தால் உங்கள் காதலை விவரித்து அப்பொருளையும் சேர்த்து இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பி விடலாம். இதன் முகவரி,
Museum of Broken Relationships,
Ćirilometodska ul. 2, 10000, Zagreb, Croatia
வாழ்வதற்குத்தான் வாழ்க்கை. முதல் தோல்வி என்றும் தோல்வியல்ல. ஒருமுறை காதலில் தோல்வியடைந்தால் மனம் உடைந்து போக வேண்டாம் தோழர்களே. வாழ்க்கையில் நல்ல துணையைக் காதலித்துக் கைகோர்த்து நலமுடன் காதல் செய்து மகிழ்ந்து வாழ்வீர். முடிந்தால், சாக்ரெப் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அப்படியே ஒரு முறை இந்த அருங்காட்சியகத்திற்கும் சென்று இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுயவாழ்க்கை அனுபவக் காதல் தோல்விச் சான்றுகளையும் பார்த்துச் செல்லுங்கள்!

No comments:

Post a Comment