Wednesday, August 2, 2017

95. குவா கெலாம் குகை அருங்காட்சியகம், பெர்லிஸ், மலேசியா

http://www.vallamai.com/?p=78637


முனைவர் சுபாஷிணி
ஈய வளமுள்ள தென்கிழக்காசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை நாம் வரலாற்றுப் பாட வகுப்பில் படித்திருப்போம். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில் பல சீனர்கள் மலேசியா நோக்கி ஈயம் கண்டெடுக்கும் பணிக்காக வந்தனர் என்பது வரலாறு. ஆண்களும் பெண்களுமாக ஈயம் தோண்டும் தொழிலில் ஈடுபட்ட தகவல்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெர்லிஸ் மாநிலத்தில் காக்கி புக்கிட் பகுதியில் (இது தாய்லாந்துக்கு மிக அருகாமையில் உள்ள அடர்ந்த காடுகள் கொண்ட ஒரு பகுதி) ஈயம் கண்டெடுக்கும் தொழிலில் ஈடுபட்ட சீனமக்களின் கதை கேட்பவர் மனதை உருக்கும் தன்மை வாய்ந்தது.
1s
உலகில் வேறெங்கு ஈயம் குகைகளில் கண்டெடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் மலேசியாவில் பெர்லிஸ் மானிலத்திலும், சபா சரவாக் காடுகளில் உள்ள குகைகளிலும் ஈயம் கண்டெடுக்கும் தொழில் மிக விரிவாக 19ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் இருப்பதை யார் முதன் முதலில் கண்டுபிடித்தார்கள் எனபது ஒரு புதிர். ஆங்கிலேயர்களின் தேடுதல்களின் பலனாகவா, அல்லது உள்ளூர் மற்றும் சயாமிய (தாய்லாந்து) மக்களின் தேடுதல் முயற்சியினாலா, அல்லது வணிகம் செய்ய மலாயா வந்த சீனர்களின் தேடுதல் முயற்சியா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், இங்கு ஈயம் உள்ளது என்ற செய்தி கிடைத்ததுமே சீனாவிலிருந்து ஆண்களும் பெண்களுமாக இப்பகுதிக்கு வந்து குவியத் தொடங்கினர். இது நிகழ்ந்தது 19ம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் எனலாம்.
குகைகளுக்குள் சென்று, ஈயம் தோண்டி எடுத்துக் கொண்டு வெளியே வருவது என்பது சாதாரண காரியமல்ல. குகைக்குள் மிக நீண்ட தூரம் சென்று உள்ளே குழிகளைத் தோண்டி, அங்கே ஈயத்தை கண்டெடுத்துத் தூய்மை செய்து, அங்கிருந்து கொண்டு வருவது மிகக் கடினமான ஒரு தொழில். இதனைச் சீன ஆண்களும் பெண்களும் அக்காலத்தில் செய்திருக்கின்றனர். ஈயம் அக்கால கட்டத்தில் செல்வம் தரும் ஒரு பொருளாக இருந்திருக்கின்றது. யார் ஈயம் உள்ள இடத்திற்குச் சொந்தக்காரராக இருக்கின்றாரோ அவர் மிக விரைவில் செல்வந்தராகி விடலாம் என்ற சூழலே இங்கு சீனர்கள் பலர் இந்தக் கடினமான வேலைக்கு வருவதற்கு ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கின்றது.
இந்த குவா கெலாம் குகைப்பகுதியின் ஒரு பகுதியில் இப்பகுதியின் வரலாற்றைக் கூறும் ஒரு அருங்காட்சியகம் இருக்கின்றது. இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்தக் குகைகௌக்குள்ளேயே பல மாதங்கள் ஆண்களும் பெண்களும் தங்கியிருந்து பணி புரிவார்களாம். இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து குகைக்குள்ளேயே உள்ளே இருந்து பணியாற்றிவிட்டு சிறிய இடைவெளிக்கு மட்டும் வெளியே வருவார்களாம். சூரிய ஒளியே தெரியாமல் பல நாட்கள் இருட்டில் இருந்து வேலை செய்வார்களாம். நம்மால் இதனை இப்போது நினைத்துப் பார்க்க முடிகின்றதா? இங்கு பணி செய்தோரில் பலர் குகைக்குள் இருக்கும் போது பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு இறந்திருக்கின்றனர். இக்குறிப்புக்கள் குவா கெலாம் அருங்காட்சியகத்தில் உள்ள விளக்க அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஈயம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதன் முக்கியத்துவம் தொழில்மயமாக்கத்திற்கு அவசியமான தேவையாகியதால், இப்பகுதி சற்று பிரபலமானவுடனேயே அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் இப்பகுதியிலும் தனது ஆளுமையை செலுத்தியிருக்கின்றது. ஈயம் உள்ள பகுதிகளைத் தங்கள் வசமாக்கிக் கொண்டு அங்கு உழைப்பதற்காகப் பல சீனர்களை சீனாவிலிருந்து இப்பகுதிக்கு ஆங்கிலேயர்கள் வரவழைத்து வந்திருக்கின்றனர். எப்படி மரக்காடுகளை அழித்து ரப்பர் தோட்டங்களையும் செம்பனைத் தோட்டங்களையும் உருவாக்க தென் தமிழகத்திலிருந்துத் தமிழ் மக்களைக் கப்பல்களில் ஆங்கில காலணித்துவ அதிகாரிகள் கொண்டு வந்தார்களோ அதே போன்ற ஒரு காரணம் தான் ஈயம் தோண்டுதல் தொழில் அடிப்படையில் சீனர்கள் இங்கே கூட்டம் கூட்டமாக வந்து சேர காரணமாகியிருக்கின்றது.
2s
உள்ளூர் மலாய் மக்கள் ஈயம் கண்டெடுக்க பயன்படுத்திய டூலாங் தட்டை தான் முதலில் சீனர்களும் பயன்படுத்தி ஈயம் தோண்டி கண்டெடுத்து சுத்தம் செய்து விற்பனை செய்து வந்திருக்கின்றனர். பின்னர் ஆங்கிலேயர்களின் நாட்டம் இப்பகுதியில் அதிகரிக்க பல புதிய கருவிகளை இத்தொழிலில் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். சர்.ஜே. கேம்பல் என்ற ஆங்கிலேய அதிகாரி ஒருவரும் திரு.ஈ.க்ராஃப் என்ற சுவிட்சர்லாந்துக்காரர் ஒருவரும் இவ்வகையில் புதிய நவீனக் கருவிகளை இப்பகுதியில் இத்தொழிலில் அறிமுகப்படுத்தியதில் மிக முக்கியமானவர்கள். இரண்டாம் உலகப் போருக்குச் சற்று முன்னர் ஜப்பானியர்கள் இப்பகுதிக்கு வந்து இப்பகுதியைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டிருந்த சமயத்தில் சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று விட்டார். ஆனால் திரு.ஈ.க்ராஃப் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்து இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். இரண்டாம் உலகப் போரின் போது இப்பகுதி முழுவதும் முற்றிலுமாக மூடப்பட்டு விட்டது. காக்கி புக்கிட் பகுதியில் எந்த ஈயம் தோண்டும் பணிகளும் நடைபெறவில்லையாம். ஆனால் போர் முடிவுற்ற பின்னர் மீண்டும் ஈயம் தோண்டும் பணிகள் தொடங்கிய போது திரு.ஈ.க்ராஃப் தானே முன்னின்று இப்பணிகளை மேற்பார்வை செய்து மீண்டும் தொடக்கி வைத்திருக்கின்றார். அத்துடன் ஈயம் கண்டெடுக்கும் பணியாளர் குழுவின் தலைவராகவும் பதவி வகித்திருக்கின்றார்.
இந்தக் கால கட்டத்தில் சர்.ஜே. கேம்பலின் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த லோ ஆ தோங், சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்து திரும்பியவுடன் அவருடைய சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அளவை தனது உடைமையாக்கிக் கொண்டார். இவர் லோ செங் ஹெங் என்ற போராட்டவாதியின் மகனுமாவார். இவரது கூர்மையான மதியினாலும், திறமையினாலும் அபார உழைப்பினாலும் காக்கி புக்கிட் பகுதியில் மிகப்பெரிய ஈய உற்பத்தி சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்தினார். பின்னர் டத்தோ என்ற உயர்நிலை பட்டமும் கூட இவருக்கு வழங்கப்பட்டது. டத்தோ லோ ஆ தோங்கின் குடும்பத்தினர் பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியின் மிக முக்கியஸ்தர்களாக இருகின்றனர். டத்தோ லோ ஆ தோங் சுதந்திர மலேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் சில காலங்கள் பதவி வகித்தார். இவரது குடும்பத்தினர் ஏறக்குறைய 600 பேர் இன்னமும் காக்கி புக்கிட் பகுதியில் இருக்கின்றனர் என்பது தகவல்.
3s
தற்சமயம் இந்தக் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் கண்டெடுக்கும் பணிகள் நடைபெறவில்லை. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தற்சமயம் சுற்றுப்பயணிகள் பார்ப்பதற்காக மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு ஒரு அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இந்தக் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் தோண்டும் தொழில் நடைபெற்ற குவா கெலாம் குகையை எத்தனை பேர் இதுவரை பார்த்திருப்பார்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பார்கள் என்பது கேள்விதான். ஆக, பெர்லிஸ் சென்றிருந்தபோது இக்குகையை நேரில் பார்த்து பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. இங்கு செல்வதற்குக் குவாலா பெர்லிஸிலிருந்து ஏறக்குறைய 28 கிமீட்டர் தூரம் வடக்கு நோக்கி பயணிக்க வேண்டும். குகைக்குள் சென்று பார்வையிடமும் அருங்காட்சியகத்தைப் பார்க்கவும் கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளே செல்வதற்கு ஒரு ரயில் பெட்டி உள்ளது. அதில் ஏறி ஏறக்குறைய 2 கி.மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதன் பின்னர் குகையின் உட்பகுதிக்குப் பயண வழிகாட்டி அழைத்துச் செல்கின்றார்.
4s
ஈயம் தோண்டும் பணி நடைபெற்ற இடங்கள், சிறிய குகைப் பாதைகள், சீனர்கள் குகைகளில் எழுதி வைத்த எழுத்துக்கள், நீர் தேங்கிக் கிடக்கும் சிறு குளங்கள் ஆகியவற்றைக் காட்டி பயண வழிகாட்டி மலாய் மொழியில் விளக்கம் அளிக்கின்றார். ஈயம் தோண்டும் பணியில் உபயோகப்படுத்திய கருவிகள் அங்கே உள்ளேயே காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குகையில் பல சிறிய குகைப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக வெளியே நிலப்பகுதிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அதில் ஒரு குகைப்பகுதி ஏறக்குறைய 3 கி.மீட்டர் தூரம். இதன் வழியாக நடந்து சென்றால் தாய்லாந்து நாட்டிற்குச் சென்று விடலாம் என்றும் பயண வழிகாட்டி விவரித்தார். மிக வியப்பாகவும் இருந்தது.
5s
இவற்றையெல்லாம் நேரில் பார்த்து விளக்கங்களையும் கேட்டு பின்னர் மீண்டு ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்து வெளியே வந்தேன். குகையின் உள்ளே அரை மணி நேரம் இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை அறிந்து கொண்டபோது இங்கே மாதக் கணக்கில் இருந்து உழைத்த மனிதர்களை நினைத்து என் மனம் கனத்தது.
இந்த குவா கெலாம் குகையைப் பார்க்க வருபவர்கள் முக்கியமாக நுழைவாயிலின் வலது புறத்தில் உள்ள அருங்காட்சி நிலையத்திற்கும் வந்து செல்ல வேண்டும். காக்கி புக்கிட் பகுதி பற்றி நல்ல பல தகவல்கள் இங்கு உள்ளன. ஈயத்தொழிலில் பயன்படுத்திய நவீன கருவிகளையும் இங்கே வைத்திருக்கின்றனர். இவையனைத்தையும் பார்த்து விட்டு அங்கேயுள்ள சிறு உணவகத்தில் காப்பி அருந்தி அவற்றோடு சுவையான மலாய் பலகாரங்களையும் சுவைத்து வர சுற்றுப்பயணிகள் மறக்கக் கூடாது.

No comments:

Post a Comment