Friday, August 18, 2017

96. தேசிய அகழாய்வு அருங்காட்சியகம் , ஏதன்சு, கிரேக்கம்.

http://www.vallamai.com/?p=79098

முனைவர் சுபாஷிணி
கிரேக்கம் என்ற பெயரைக் கேட்டவுடன் நம் மனதில் எழும் அதிர்வுகள் அதன் பழமையின் பெருமையைக் குறிப்பதாகத்தான் இருக்கும். இன்றைய கிரேக்கமும் பழமையான நாகரிகத்தின் எச்சங்களைப் போற்றும், அதன் சிறப்பைப் பறைசாற்றும் வகையில் தான் உள்ளன. கிரேக்கத்தின் ஏறக்குறைய எல்லாப் பகுதிகளுமே அகழ்வாராய்ச்சி நடத்தினால் தோண்டத் தோண்ட புராதனச் சான்றுகள் கிடைக்கும் வகையில் தான் உள்ளன. அகழ்வாராய்ச்சியின் வழியாகத் தான் வரலாற்றுப் பழமை சொல்லும் சான்றுகளைத் தேட வேண்டும் என்ற வரையறை இன்றி நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுச் சின்னங்கள் பல நிறைந்த நாடு தான் கிரேக்கம். அதில் குறிப்பாகச் சொல்வதென்றால் கிரேக்கத்தின் தலைநகரமாக விளங்கும் ஏதன்ஸ் நகரைக் குறிப்பிட வேண்டும். இதில் முதன்மையாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது அக்ரோபோலிஸ். ஒரு தனி கட்டிடம் அல்லது ஊர் என்றில்லாது, ஒரு சிறு நகரமே தொல்லியல் அகழாய்வுச் சிறப்பு பெற்ற உலகின் மிக முக்கிய வரலாற்றுப் பகுதியாக கருதப்படுகின்றது . அக்ரோபோலிஸ் வகை கட்டிட கட்டுமான அமைப்பைச் சார்ந்து கட்டப்படாத உலக நாடுகளின் கட்டிடங்கள் மிகக் குறைவே எனலாம். அதிலும் குறிப்பாக, வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் ஏனைய அனைத்து நாடுகளின் கட்டிட அமைப்பு பாணி பெரும்பாலும் அக்ரோபோலிஸ் வகை அமைப்பாக இருப்பதே இதற்குச் சான்று.
அக்ரபோலிஸ் போன்றே அகோரா, அசுப்ரோசாலிகொ, ப்ரவுரன், கிரேட்ட, டெலொச், டெல்ஃபி, டிமினி, எப்பிடவுரஸ் ​டொடோனா, ​ மாரத்தோன், ஒலிம்பியா போன்ற அகழாய்வு நகரங்களையும் நாம் குறிப்பிடலாம். நிலத்துக்கு மேல் உள்ள சான்றுகளும், நிலத்துக்கு அடியில் அகழ்ந்து தோண்டி கண்டெடுத்த சான்றுகளும் சொல்லும் வரலாற்றினை மேலும் வளப்படுத்தும் வகையில் கிரேக்கத்தின் கடற்கரையோர அகழாய்வுகளும் தீவுகளில் நிகழ்த்தப்பட்ட தொடர்ச்சியான அகழாய்வுகளும் புதிய வரலாற்றுச் சான்றுகளை வழங்கியவாறு இருக்கின்றன.
2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏதன்ஸ் நகருக்கு சில நாட்கள் பயணம் சென்றிருந்தேன். இந்தப் பயணத்தின் போது ஏதன்ஸ் நகரைச் சுற்றிலுமுள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பார்வையிடுவதிலும் அங்குள்ள சில அருங்காட்சியகங்களுக்குச் சென்று பார்த்து அங்கு ஆய்வுகளைச் செய்வதாகவும் எனது நாட்கள் கடந்தன. அந்தப் பயணத்தில் நான் சென்று வந்த அருங்காட்சியகங்களில் ஒன்று ஏதன்ஸ் தேசிய அருங்காட்சியகம்.
as1
19ம் நூற்றாண்டு வாக்கில் ஏதன்ஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட தொடர்ச்சியான அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சான்றுகளைச் சேகரித்து வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் இது. ஆயினும் பின்னர் ஏதன்ஸ் நகருக்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டு இங்கே பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் கிரேக்கத்தின் மிகப் பெரிய அருங்காட்சியகம் என்ற சிறப்பு பெற்ற அருங்காட்சியகம் இது என்பதோடு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம்பெறும் ஒரு அருங்காட்சியகம் இது என அறியப்படுகின்றது. 11,000க்கும் மேற்பட்ட அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை அறியும் போது இது எவ்வளவு பெரிய ஒரு அருங்காட்சியகம் என்பதை ஓரளவு வாசிப்போரால் ஊகிக்க முடியுமல்லவா?
1866ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் இது. எலனி டொசொடா என்பவர் வழங்கிய நிலத்தில் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் கட்டப்பட்டது. இங்குள்ள சேகரிப்புக்களை நான்கு பெரும் பகுப்புக்களாகப் பிரித்து விடலாம்.
வரலாற்றுக் காலத்துக்கும் முந்திய நாகரிகத்தின் தொல்லியல் சான்றுகள் – கி.மு 6000 லிருந்து கி.மு. 1050 வரையிலான தொல்லியல் சான்றுகளின் சேகரிப்புத் தொகுப்புக்கள்.
சிற்பத் தொகுதி – கி.மு.7ம் நூற்றாண்டிலிருந்து கி.மு 5 வரையிலான சிற்பக் கலை வடிவங்களின் சேகரிப்புக்கள்.
குடுவைகளும் பானைகளும் – பண்டைய கிரேக்க நாகரிகத்தின் சான்றாகத் திகழும் பானை வடிவங்களின் தொகுப்பு. இந்தப் பானை வடிவங்களின் மேல் கீறப்பட்டுள்ள ஓவியங்களும் காட்சிகளும் வெவ்வேறு காலகட்டங்களின் வரலாற்றுச் செய்திகளைத் தருகின்ற ஆவணங்களாகத் திகழ்கின்றன. இந்த சேகரிப்பில் இவற்றில் பெரும்பாலானவை கி.மு 11ம் நூற்றாண்டு தொடங்கி ரோமானிய பேரரசின் காலம் வரையிலான சேகரிப்புக்களே.
இரும்புக்கால சேகரிப்புக்கள் – வெவ்வேறு வகையான சிற்பங்கள், சிறிய கைவினைப் பொருட்களின் வடிவங்கள் ஆகியவற்றின் சேகரிப்புக்கள்.
இவை தவிர உலக நாகரிகங்களில் புகழ்பெற்ற பழம்பெருமை கொண்ட எகிப்திய நாகரிகத்தின் சான்றுகளின் சேகரிப்புக்களுடன் சைப்ரஸ் தீவின் சேகரிப்புக்களும் இடம்பெறுகின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள அரும்பொருட்கள் ஏராளம். ஒவ்வொன்றுமே தனித்துவம் பெற்றவையே என்றாலும் வரலாற்றுப் புகழ் மிக்க சில அரும்பொருட்களை மட்டும் ஓரளவு விளக்குவது அவசியம் எனக் கருதுகிறேன்.
as2
இந்த அருங்காட்சியகத்தின் முகப்பில் முதலில் நுழைந்ததும் நம்மை வரவேற்பது வரலாற்றுக்கு முந்தைய காலத்து தொல்பொருட்களின் சேகரிப்பு. அங்கு மிக நேர்த்தியாக முதலில் நம் பார்வையில் தென்படுவது “Thinker” சிற்பம். கி.மு. 4500லிருந்து கி.மு. 3300 பழமையானது என அறியப்படுகின்றது இந்தச் சிற்பம். சிந்தனையில் ஒரு மனிதன் ஆழ்ந்திருப்பது போல இதன் வடிவம் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இந்தச் சிந்திக்கும் மனிதனின் சிற்பம் என்பது கிரேக்கத்தினை உருவகப்படுத்தும் மிகச் சிறந்த ஒரு சிற்பம் என்ற சிறப்பினைப் பெறுகின்றது. உலக சிந்தனையாளர்கள் வரிசையில் நீங்கா இடம்பெற்ற சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில் ஆகியோரின் சிற்பங்கள் ஏறக்குறைய இவ்வகையில் அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் நாம் தொடர்புப்படுத்திக் காணலாம். ஐரோப்பாவின் பெரும் நகரங்களில் ஆங்காங்கே உள்ள சிற்பங்களில் சிந்திக்கும் மனிதனின் வடிவம் செம்பிலும் கருங்கல்லிலும் சற்றே வேறு வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும் இந்த வடிவமே இதுவரை கண்டெடுக்கப்பட்ட சிந்திக்கும் மனிதனின் ஆரம்பக்கால மிகப் பழமையான சிற்ப வடிவமாக அறியப்படுகின்றது.
as3
“The Nurse” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் சிற்பம் சற்றே நுணுக்கமானது. இச்சிற்பத்தில் தலைப்பகுதி துண்டிக்கப்பட்ட வகையில் இது அமைந்துள்ளது. கி.மு.4800 லிருந்து கி.மு.4500 ஆண்டு வாக்கில் செய்யப்பட்ட சிற்பம் என இதனை வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். ஒரு நாற்காலியில் அமர்ந்த நிலையில் ஒரு பெண் ஒரு குழந்தையை மிகுந்த வாஞ்சையுடன் அணைத்துப் பாதுகாப்பது போல அமைக்கப்பட்ட சிற்பம் இது. நாற்காலி பயன்பாடு என்பது இக்கால கட்டத்தில் ஏதன்ஸ் பகுதியில் இருந்தது என்பதற்குச் சான்றாகவும் இச்சிற்பம் இருக்கின்றது.
டான் ப்ரவுனின் இன்ஃபெர்னோ நாவலைப் படித்தவர்களோ அல்லது அதன் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்தவர்களோ Death Mask என்பதைப் பற்றி அறிந்திருக்கலாம். கி.பி. 14ம் நூற்றாண்டு வாக்கில் ப்ளேக் நோயினால் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்ததை குறியீடாகக் காட்டும் இன்ஃபெர்னோவின் இறப்பு முகமூடி. அது மெழுகால் செய்யப்பட்டது. ஆனால், அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன் மைசேனியன் நாகரிகத்து மக்களால் செய்யப்பட்ட Death Mask ஒன்று இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த முகமூடியோ முழுதும் தங்கத்தால் செய்யப்பட்ட முகமூடி. கி.மு.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த முகமூடி என இது அறியப்படுகின்றது. தாடியுடன் கூடிய ஒரு மனிதனின் முகமாக இது அமைந்துள்ளது. காதுப் பகுதியில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இறந்து போல ஒரு அரச குலத்தவர் அல்லது பிரபுவின் முகத்தின் மீது வைத்து மூடப்பட்ட வகையில் இது பயன்பாட்டில் இருந்துள்ளது. இன்று இந்தத் தங்க முகமூடி ஆண்டுகள் பல கழிந்தாலும், தான் அழியாமல் ஏதன்ஸ் அகழாய்வு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒவ்வொரு அரும்பொருட்களையும் பற்றி விளக்கிக் கொண்டே செல்லலாம். மனிதர்கள் இறந்தவுடன் அவர்களது உடலைப் பானைக்குள் வைத்து அதனைப் புதைக்கும் முதுமக்கள் தாழி எனப்படும் பானைகள் இந்த அருங்காட்சியகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. அவை மட்டுமன்றி அக்ரபோலிஸ், ஒலிம்பியா போன்ற மிகப்பெரிய தொல்லியல் அகழ்வாய்வுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமானச் சான்றுகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
as5
இந்த அருங்காட்சியகத்தில் ஒரு நூலகமும் இருக்கின்றது. 25,000க்கும் மேற்பட்ட நூல்கள் இந்த நூலகத்தில் உள்ளன. பெரும்பாலானவை அகழ்வாராய்ச்சி தொடர்பானவை. சில நூல்கள் 17ம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை. பெரும்பாலானவை 19ம், 20ம் நூற்றாண்டைச் சார்ந்த தொல்லியல் துறை சார்ந்த நூல்களே.
பணடைய கிரேக்கத்த்க்கும் தமிழகத்துக்கும் நீண்ட நெடிஅ கடல்வழித் தொடர்புகள் இருந்தன. கிரேக்கத்திலிருந்து வணிகர்களும் பண்டைய தமிழகத்திலுரிந்து வணிகர்களும் இரு நாடுகளிலும் வணிகம் செய்தனர் என்பதை மறந்து விடலாகாது. இதனைக் குறிக்கும் வகையிலான குறியீடுகளைக் கொண்ட பானைகளும் சிற்பங்களும் இங்கே கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. அந்த சிந்தனையோடு காணும் போது தமிழக வரலாற்றாய்வாளர்கள் இந்த அருங்காட்சியகம் சென்றும் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்வது மிகப் பயணளிக்கும் என்பதில் ஐயமில்லை.

Wednesday, August 2, 2017

95. குவா கெலாம் குகை அருங்காட்சியகம், பெர்லிஸ், மலேசியா

http://www.vallamai.com/?p=78637


முனைவர் சுபாஷிணி
ஈய வளமுள்ள தென்கிழக்காசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை நாம் வரலாற்றுப் பாட வகுப்பில் படித்திருப்போம். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில் பல சீனர்கள் மலேசியா நோக்கி ஈயம் கண்டெடுக்கும் பணிக்காக வந்தனர் என்பது வரலாறு. ஆண்களும் பெண்களுமாக ஈயம் தோண்டும் தொழிலில் ஈடுபட்ட தகவல்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெர்லிஸ் மாநிலத்தில் காக்கி புக்கிட் பகுதியில் (இது தாய்லாந்துக்கு மிக அருகாமையில் உள்ள அடர்ந்த காடுகள் கொண்ட ஒரு பகுதி) ஈயம் கண்டெடுக்கும் தொழிலில் ஈடுபட்ட சீனமக்களின் கதை கேட்பவர் மனதை உருக்கும் தன்மை வாய்ந்தது.
1s
உலகில் வேறெங்கு ஈயம் குகைகளில் கண்டெடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் மலேசியாவில் பெர்லிஸ் மானிலத்திலும், சபா சரவாக் காடுகளில் உள்ள குகைகளிலும் ஈயம் கண்டெடுக்கும் தொழில் மிக விரிவாக 19ம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் இருப்பதை யார் முதன் முதலில் கண்டுபிடித்தார்கள் எனபது ஒரு புதிர். ஆங்கிலேயர்களின் தேடுதல்களின் பலனாகவா, அல்லது உள்ளூர் மற்றும் சயாமிய (தாய்லாந்து) மக்களின் தேடுதல் முயற்சியினாலா, அல்லது வணிகம் செய்ய மலாயா வந்த சீனர்களின் தேடுதல் முயற்சியா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், இங்கு ஈயம் உள்ளது என்ற செய்தி கிடைத்ததுமே சீனாவிலிருந்து ஆண்களும் பெண்களுமாக இப்பகுதிக்கு வந்து குவியத் தொடங்கினர். இது நிகழ்ந்தது 19ம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் எனலாம்.
குகைகளுக்குள் சென்று, ஈயம் தோண்டி எடுத்துக் கொண்டு வெளியே வருவது என்பது சாதாரண காரியமல்ல. குகைக்குள் மிக நீண்ட தூரம் சென்று உள்ளே குழிகளைத் தோண்டி, அங்கே ஈயத்தை கண்டெடுத்துத் தூய்மை செய்து, அங்கிருந்து கொண்டு வருவது மிகக் கடினமான ஒரு தொழில். இதனைச் சீன ஆண்களும் பெண்களும் அக்காலத்தில் செய்திருக்கின்றனர். ஈயம் அக்கால கட்டத்தில் செல்வம் தரும் ஒரு பொருளாக இருந்திருக்கின்றது. யார் ஈயம் உள்ள இடத்திற்குச் சொந்தக்காரராக இருக்கின்றாரோ அவர் மிக விரைவில் செல்வந்தராகி விடலாம் என்ற சூழலே இங்கு சீனர்கள் பலர் இந்தக் கடினமான வேலைக்கு வருவதற்கு ஒரு உந்து சக்தியாக இருந்திருக்கின்றது.
இந்த குவா கெலாம் குகைப்பகுதியின் ஒரு பகுதியில் இப்பகுதியின் வரலாற்றைக் கூறும் ஒரு அருங்காட்சியகம் இருக்கின்றது. இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்தக் குகைகௌக்குள்ளேயே பல மாதங்கள் ஆண்களும் பெண்களும் தங்கியிருந்து பணி புரிவார்களாம். இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து குகைக்குள்ளேயே உள்ளே இருந்து பணியாற்றிவிட்டு சிறிய இடைவெளிக்கு மட்டும் வெளியே வருவார்களாம். சூரிய ஒளியே தெரியாமல் பல நாட்கள் இருட்டில் இருந்து வேலை செய்வார்களாம். நம்மால் இதனை இப்போது நினைத்துப் பார்க்க முடிகின்றதா? இங்கு பணி செய்தோரில் பலர் குகைக்குள் இருக்கும் போது பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு இறந்திருக்கின்றனர். இக்குறிப்புக்கள் குவா கெலாம் அருங்காட்சியகத்தில் உள்ள விளக்க அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஈயம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதன் முக்கியத்துவம் தொழில்மயமாக்கத்திற்கு அவசியமான தேவையாகியதால், இப்பகுதி சற்று பிரபலமானவுடனேயே அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் இப்பகுதியிலும் தனது ஆளுமையை செலுத்தியிருக்கின்றது. ஈயம் உள்ள பகுதிகளைத் தங்கள் வசமாக்கிக் கொண்டு அங்கு உழைப்பதற்காகப் பல சீனர்களை சீனாவிலிருந்து இப்பகுதிக்கு ஆங்கிலேயர்கள் வரவழைத்து வந்திருக்கின்றனர். எப்படி மரக்காடுகளை அழித்து ரப்பர் தோட்டங்களையும் செம்பனைத் தோட்டங்களையும் உருவாக்க தென் தமிழகத்திலிருந்துத் தமிழ் மக்களைக் கப்பல்களில் ஆங்கில காலணித்துவ அதிகாரிகள் கொண்டு வந்தார்களோ அதே போன்ற ஒரு காரணம் தான் ஈயம் தோண்டுதல் தொழில் அடிப்படையில் சீனர்கள் இங்கே கூட்டம் கூட்டமாக வந்து சேர காரணமாகியிருக்கின்றது.
2s
உள்ளூர் மலாய் மக்கள் ஈயம் கண்டெடுக்க பயன்படுத்திய டூலாங் தட்டை தான் முதலில் சீனர்களும் பயன்படுத்தி ஈயம் தோண்டி கண்டெடுத்து சுத்தம் செய்து விற்பனை செய்து வந்திருக்கின்றனர். பின்னர் ஆங்கிலேயர்களின் நாட்டம் இப்பகுதியில் அதிகரிக்க பல புதிய கருவிகளை இத்தொழிலில் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். சர்.ஜே. கேம்பல் என்ற ஆங்கிலேய அதிகாரி ஒருவரும் திரு.ஈ.க்ராஃப் என்ற சுவிட்சர்லாந்துக்காரர் ஒருவரும் இவ்வகையில் புதிய நவீனக் கருவிகளை இப்பகுதியில் இத்தொழிலில் அறிமுகப்படுத்தியதில் மிக முக்கியமானவர்கள். இரண்டாம் உலகப் போருக்குச் சற்று முன்னர் ஜப்பானியர்கள் இப்பகுதிக்கு வந்து இப்பகுதியைத் தங்கள் வசமாக்கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டிருந்த சமயத்தில் சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று விட்டார். ஆனால் திரு.ஈ.க்ராஃப் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்து இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். இரண்டாம் உலகப் போரின் போது இப்பகுதி முழுவதும் முற்றிலுமாக மூடப்பட்டு விட்டது. காக்கி புக்கிட் பகுதியில் எந்த ஈயம் தோண்டும் பணிகளும் நடைபெறவில்லையாம். ஆனால் போர் முடிவுற்ற பின்னர் மீண்டும் ஈயம் தோண்டும் பணிகள் தொடங்கிய போது திரு.ஈ.க்ராஃப் தானே முன்னின்று இப்பணிகளை மேற்பார்வை செய்து மீண்டும் தொடக்கி வைத்திருக்கின்றார். அத்துடன் ஈயம் கண்டெடுக்கும் பணியாளர் குழுவின் தலைவராகவும் பதவி வகித்திருக்கின்றார்.
இந்தக் கால கட்டத்தில் சர்.ஜே. கேம்பலின் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த லோ ஆ தோங், சர்.ஜே. கேம்பல் இங்கிலாந்து திரும்பியவுடன் அவருடைய சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அளவை தனது உடைமையாக்கிக் கொண்டார். இவர் லோ செங் ஹெங் என்ற போராட்டவாதியின் மகனுமாவார். இவரது கூர்மையான மதியினாலும், திறமையினாலும் அபார உழைப்பினாலும் காக்கி புக்கிட் பகுதியில் மிகப்பெரிய ஈய உற்பத்தி சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்தினார். பின்னர் டத்தோ என்ற உயர்நிலை பட்டமும் கூட இவருக்கு வழங்கப்பட்டது. டத்தோ லோ ஆ தோங்கின் குடும்பத்தினர் பெர்லிஸின் காக்கி புக்கிட் பகுதியின் மிக முக்கியஸ்தர்களாக இருகின்றனர். டத்தோ லோ ஆ தோங் சுதந்திர மலேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பின்னர் சில காலங்கள் பதவி வகித்தார். இவரது குடும்பத்தினர் ஏறக்குறைய 600 பேர் இன்னமும் காக்கி புக்கிட் பகுதியில் இருக்கின்றனர் என்பது தகவல்.
3s
தற்சமயம் இந்தக் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் கண்டெடுக்கும் பணிகள் நடைபெறவில்லை. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி தற்சமயம் சுற்றுப்பயணிகள் பார்ப்பதற்காக மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு ஒரு அருங்காட்சியகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இந்தக் காக்கி புக்கிட் பகுதியில் ஈயம் தோண்டும் தொழில் நடைபெற்ற குவா கெலாம் குகையை எத்தனை பேர் இதுவரை பார்த்திருப்பார்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பார்கள் என்பது கேள்விதான். ஆக, பெர்லிஸ் சென்றிருந்தபோது இக்குகையை நேரில் பார்த்து பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. இங்கு செல்வதற்குக் குவாலா பெர்லிஸிலிருந்து ஏறக்குறைய 28 கிமீட்டர் தூரம் வடக்கு நோக்கி பயணிக்க வேண்டும். குகைக்குள் சென்று பார்வையிடமும் அருங்காட்சியகத்தைப் பார்க்கவும் கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளே செல்வதற்கு ஒரு ரயில் பெட்டி உள்ளது. அதில் ஏறி ஏறக்குறைய 2 கி.மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதன் பின்னர் குகையின் உட்பகுதிக்குப் பயண வழிகாட்டி அழைத்துச் செல்கின்றார்.
4s
ஈயம் தோண்டும் பணி நடைபெற்ற இடங்கள், சிறிய குகைப் பாதைகள், சீனர்கள் குகைகளில் எழுதி வைத்த எழுத்துக்கள், நீர் தேங்கிக் கிடக்கும் சிறு குளங்கள் ஆகியவற்றைக் காட்டி பயண வழிகாட்டி மலாய் மொழியில் விளக்கம் அளிக்கின்றார். ஈயம் தோண்டும் பணியில் உபயோகப்படுத்திய கருவிகள் அங்கே உள்ளேயே காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குகையில் பல சிறிய குகைப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக வெளியே நிலப்பகுதிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அதில் ஒரு குகைப்பகுதி ஏறக்குறைய 3 கி.மீட்டர் தூரம். இதன் வழியாக நடந்து சென்றால் தாய்லாந்து நாட்டிற்குச் சென்று விடலாம் என்றும் பயண வழிகாட்டி விவரித்தார். மிக வியப்பாகவும் இருந்தது.
5s
இவற்றையெல்லாம் நேரில் பார்த்து விளக்கங்களையும் கேட்டு பின்னர் மீண்டு ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்து வெளியே வந்தேன். குகையின் உள்ளே அரை மணி நேரம் இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை அறிந்து கொண்டபோது இங்கே மாதக் கணக்கில் இருந்து உழைத்த மனிதர்களை நினைத்து என் மனம் கனத்தது.
இந்த குவா கெலாம் குகையைப் பார்க்க வருபவர்கள் முக்கியமாக நுழைவாயிலின் வலது புறத்தில் உள்ள அருங்காட்சி நிலையத்திற்கும் வந்து செல்ல வேண்டும். காக்கி புக்கிட் பகுதி பற்றி நல்ல பல தகவல்கள் இங்கு உள்ளன. ஈயத்தொழிலில் பயன்படுத்திய நவீன கருவிகளையும் இங்கே வைத்திருக்கின்றனர். இவையனைத்தையும் பார்த்து விட்டு அங்கேயுள்ள சிறு உணவகத்தில் காப்பி அருந்தி அவற்றோடு சுவையான மலாய் பலகாரங்களையும் சுவைத்து வர சுற்றுப்பயணிகள் மறக்கக் கூடாது.