Friday, June 30, 2017

92. தேசிய அருங்காட்சியகம் டப்லின், அயர்லாந்து

http://www.vallamai.com/?p=77873

முனைவர் சுபாஷிணி
​கெல்ஸ் நூல் (The book of Kells) எனப்படும் கிறிஸ்துவ கோஸ்பல் பாடல்கள் கொண்ட நூல் பற்றி ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இது 9ஆம் நூற்றாண்டில் முழுதாக வடிவமைக்கப்பட்ட ஒரு நூல். எழுதிய நூல் என்று சொல்வதை விட வடிவமைக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட நூல் என்று சொல்வது இதற்கு மிகப் பொருந்தும். இந்நூலில் இலத்தீன் மொழியில் புதிய டெஸ்டமனில் உள்ள நான்கு கோஸ்பல்கள் அடங்கியுள்ளன. இவற்றுடன் பல வாசகங்களும் ஓவியங்களும் நிறைந்துள்ள ஒரு கலைநயம் மிக்க நூல் இது.
இந்த நூல் கெல்ட்டிக் பாரம்பரியத்தில் தோன்றி பின்னர் கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்ட பாதிரிமார்களால் உருவாக்கப்பட்டது. இந்த நூலின் காலம் ஏறக்குறை கி.பி 800 அல்லது அதற்கும் முந்தைய ஆண்டுகளாக இருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். இந்த நூலின் சிறப்பு என்னவென்றால், கோஸ்பல் பாடல்களையும் விளக்கங்களையும் வாசகங்களையும் சுற்றி தீட்டப்பட்டுள்ள கவின்மிகு ஓவியங்கள் தாம் எனலாம். இவை செல்ட்டிக் பாரம்பரியத்தின் தாக்கத்தை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவனவாக உள்ளமையே இதன் சிறப்பு.
புக் ஆஃப் கெல்ஸில் அடங்கியுள்ள ஓவியங்கள் கிறித்துவ பாரம்பரிய சின்னங்களை உள்ளடக்கியதாகவும் அதே வேளை கெல்ட்டிக் பாரம்பரியத்தின் மிக முக்கிய சின்னங்களான மனித உருவங்கள், மிருகங்கள், சுற்றி வளைத்து சூழும் பாம்பு, மாய உருவங்கள் ஆகியனவற்றையும் கொண்டிருக்கின்றது. அதோடு கெல்ட் பாரம்பரியத்தின் அடிப்படை சின்னமான கெல்ட்டிக் முடிச்சு மிகத் தெளிவான கவர்ச்சியான வர்ணங்களில் நூல் முழுவதும் இடம் பெறுகின்றது. அயர்லாந்துக்கு ஆறாம் நூற்றாண்டில் புதிதாக நுழைந்த கிறிஸ்துவ சமயம் அயர்லாந்தின் பாரம்பரிய செல்ட்டிக் வழக்கங்களை ஏற்றுக்கொண்டு எவ்வாறு புதிய வகையில் வளம் பெற்று வளர்ந்தது என்பதற்குச் சான்றாகவும் அமைகின்றது.
2
நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இந்த நூல் தற்சமயம் டப்ளினில் உள்ள ட்ரினிட்டி கோலேஜ் நூலகத்தில் (Trinity College Library) பாதுகாக்கப்படு வருகின்றது. இந்த நூலகம் இருக்கும் அருங்காட்சியகம் தான் அயர்லாந்து தேசிய அருங்காட்சியகம்.
அயர்லாந்தின் மிகப் பெரிய பொக்கிஷமாக இந்த நூல் இன்று கருதப்படுகின்றது. புக் ஆஃப் கெல்ஸ் நூல் மிகப் பிரபலமானதாகவும், மிக நுணுக்கமாகவும் தயாரிக்கப்பட்ட ஒரு நூல் என்பதும் முக்கிய குறிப்பாகும். ஐயோனா தீவு, மற்றும் அயர்லாந்தின் கெல்ஸ் நகரில் மடம் அமைத்து இங்கு கிறுத்துவ மதத்தைப் பரவச் செய்த பாதிரிமார்களின் அரிய ஒரு கலைப்படைப்பு இந்த நூல்.
இந்தாருங்காட்சியகத்திலேயே உள்ள ட்ரினிட்டி கோலேஜ் நூலகத்தில் இந்த நூலின் அசல் இருந்தாலும் இந்த நூலின் அச்சுப் பிரதிகளும் வெளியிடப்பட்டன என்பதும் ஒரு செய்திதான். மிகக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மட்டுமே இவை பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. 1990ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் உள்ள செய்தியின் அடிப்படையில் 1990 ஆம்ஆண்டில் இந்த அச்சு நூல் ஒன்றின் விலை $18,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இன்னூலின் விலை மேலும் அதிகரித்திருக்கலாம் என நம்பலாம்.
இந்த நூல் எப்படி ட்ரினிட்டி கோலேஜ்க்கு வந்தது என பார்ப்போம்.
அடிப்படையில் இது கையால் வர்ணம் தீட்டி எழுத்துக்களைக் கோர்த்து வடிக்கப்பட்ட ஒரு நூல். இதன் பக்கங்கள் அனைத்திலும் இருக்கும் வர்ண ஓவிய வேலைப்பாடுகளை மூன்று பாதிரிமார்கள் செய்திருக்கின்றனர். எழுத்துக்களை நான்கு பாதிரிமார்கள் வடித்திருக்கின்றனர். கி.பி 800ம் ஆண்டு வாக்கில் முடிக்கப்பட்ட இந்த நூல் அயர்லாந்தின் கெல்ஸ் நகரில் உள்ள கிறிஸ்துவ மடத்தில் நிறைவு செய்யப்பட்டதால் அந்த நகரின் பெயரிலே வழங்கப்படுகிறது. அயர்லாந்துக்கும் ஸ்கோட்லண்டுக்கும் இடையில் உள்ள ஐயோனா (Iona) என்ற தீவில் உள்ள கிறிஸ்துவ மடத்தில் இதன் ஆரம்ப கட்ட உருவாக்கப்பணிகள் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
4
ஐயோனா (Iona) வில் கொள்ளையர்கள் மடத்தில் நுழைந்து தாக்கி அங்கிருந்த பொருட்களைச் சூறையாடிச் சென்று மடத்தையும் தீவைத்து கொளுத்தி நாசப்படுத்திய போது பாதிரிமார்கள் அங்கிருந்து சில முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு கடல் வழி பயணித்து அயர்லாந்தின் கெல்ஸ் நகருக்கு வந்திருக்கின்றனர்.
அங்கு கெல்ஸ் மடத்தில் இப்பணியைத் தொடர்ந்து செய்து நிறைவேற்றி முழு நூலையும் முடித்திருக்கின்றனர். இந்த நூலில் ஆக மொத்தம் 680 பக்கங்கள் உள்ளன. அதில் இரண்டு பக்கங்களில் மட்டும் தான் வர்ணம் இல்லை. ஏனையவை முழுக்க முழுக்க செல்ட்டிக் கலாச்சார ஓவியங்களைப் பிரதிபலிக்கும் சின்னங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
1661ம் ஆண்டு தொடங்கி இந்த நூல் ட்ரினிடி கோலேஜில் (Library of Trinity College – Dublin) ல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இடைப்பட்ட காலத்தில் இந்த நூல் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டாலும் பாதுகாப்பு முறைகள் சரியாக அமைந்திருக்கவில்லை. ஆக 1953ம் ஆண்டில் இந்த நூல் முறையாக தூய்மை செய்யப்பட்டு அசல் நூல் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு சிறிதாக்கப்பட்டு வைக்கப்பட்டது. இந்த நூலின் அசலின் 2 பாகங்கள் ட்ரினிடி கோலேஜின் நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்படுகின்றது. இதன் மேலும் இரண்டு பாகங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதில்லையென்றாலும் அவை முக்கிய ஆய்வாளர்களின் பார்வைக்கு மட்டும் என்ர வகையில் அனுமதி வழங்கப்படுகின்றது. ட்ரினிடி கோலேஜில் உள்ள 2 பாகங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் திருப்பப்பட்டு காட்சிக்கு வைக்கப்படுகின்றது. இதனால் தினம் நூலகத்துக்கு வந்து இந்த நூலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்தை வாசித்துச் செல்லலாம்.
இந்த நூலை மறுபதிப்பு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட சுவிஸர்லாந்தின் Faksimile Verlag (Fine Art Facsimile Publishers) நிறுவனத்தினர் இந்த நூலை கையில் தொடாமல் ட்ரினிடி காலேஜிலிருந்து வெளியே எடுக்காமல் ஒரு சிறப்பு கருவியை பயன்படுத்தி இதன் பக்கங்களைத் தொடாமலேயே காமெராவில் பதிவு செய்து இந்த நூலினை மின்னாக்கம் செய்து எண்மப் பதிவாக்கி முழுமைபடுத்தினர். ட்ரினிடி காலேஜ் சிறு எண்ணிக்கையில் இந்த நூலை சிறப்பு வெளியீடு செய்தனர். இந்தப் பதிப்பு நிறுவனத்துக்கு இந்தக் கருவியை உருவாக்க கால் 1/4 மில்லியன் சுவிஸ் ப்ராங்க் தேவைப்பட்டதாம். இந்தக் கருவி கொண்டு 1986ம் ஆண்டில் சில நாட்கள் தொடர்ந்து இப்பணி செய்து முடிக்கப்பட்டிருக்கின்றது.
5
இவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்த நூலை இந்த அருங்காட்சியகத்தில் நேரில் பார்க்க முடிந்த நாளில் என் மனம் அடைந்த ஆச்சரியத்தை இன்றும் உணர்கின்றேன். இந்த அருங்காட்சியகத்தில் இந்த அரிய பொக்கிஷமான கெல்ஸ் நூல் மட்டுமல்ல, ஏராளமான் ஆஅய்வுக் கருவிகள், அதிலும் குறிப்பாக உடற்கூறு சம்பந்தமான மருத்துவ சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு அறுவைச் சிகிச்சை கருவிகள், அறிவியல் துரை சார்ந்த குறிப்பிடத்தக்க சாதனக்கள் என வருவோரை பிரமிக்க வைக்கும் ஒரு அருங்காட்சியகமே இது. டப்ளின் செல்பவர்கள் கட்டாயம் தவறவிடாமல் நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று பார்த்து வரவேண்டும்.

Friday, June 9, 2017

91. பீசா சாய்ந்த கோபுர அருங்காட்சியகம், பீசா, இத்தாலி

http://www.vallamai.com/?p=77428

முனைவர் சுபாஷிணி
உலக அதிசயங்களில் ஒன்று. சரிந்து விழுந்து நொறுங்கி விடுமோ எனப் பலரும் நினைத்துத் திகைக்கும் கட்டிடம் என்று அடையாளம் காணப்படும் பீசா கோபுரம் பற்றியதுதான் இன்றைய கட்டுரை.
1
பீசா சாய்ந்த கோபுரம் அடிப்படையில் ஒரு மணிக்கூண்டு என்று தான் சொல்ல வேண்டும். பீசா நகரின் தேவாலயத்தின் ஆலய மணிகள் கட்டப்பட்ட கூண்டு தான் இது. கி.பி.1152ம் ஆண்டில் பீசா தேவாலயத்தின் கட்டிடப்பணிகள் தொடங்கப்பட்டு கி.பி.1363ம் ஆண்டில் நிறைவு பெற்றது. இந்தத் தேவாலயத்தை உலகம் முழுதும் உள்ள மக்கள் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, அதன் மணிக்கூண்டு உள்ள இந்த பீசா சாய்ந்த கோபுரம், அதன் சாய்வான கட்டிட அமைப்பிற்காகவே உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
2
பீசா சாய்ந்த கோபுரத்தின் அடித்தளத்தில் தான் பீசா கோபுர அருங்காட்சியகப் பகுதி இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் இந்தக் கோபுரத்தின் கட்டுமான விபரங்களை அளிக்கும் ஒரு அருங்காட்சியகம் மட்டுமே. இச்சாய்ந்த கோபுரத்தின் கட்டுமானப்பணிகள் தொடர்பான விபரங்களும் குறிப்புக்களும் புகைப்படங்களாகவும் விபரக்குறிப்புக்களாகவும் இப்பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தாலிய மொழியிலும் ஆங்கிலத்திலும் இக்குறிப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
3
கோபுரம் சாய்ந்துகொண்டிருப்பதை பார்ப்போருக்கு அதற்குள் மனிதர்கள் சென்று வரலாமா ? அப்படிச் செல்லும் போது சாய்ந்த கோபுரம் சாய்ந்து விடுமா? என்பது போன்ற சந்தேகங்கள் எழலாம்.ஆனால் நாம் அஞ்சத்தேவையில்லை. பீசா சாய்ந்த கோபுரத்தின் உள்ளே சென்று மேல் மாடி வரை நடந்து சென்று அங்கிருந்து எழில் மிகும் பீசா நகரைக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்து மகிழலாம். இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தேவாலயத்தைக் கட்டியபோது, அதன் பின்னால் இருப்பது போல இந்த மணிக்கூண்டு கட்டிடத்தை அமைத்தனர். கட்ட ஆரம்பித்தபோது அடித்தளம் மென்மையானதாக இருந்தமையால் ஒரு பக்கம் தாழ்ந்த நிலையில் கட்டிடம் இறங்கிவிட்டது. கோபுரத்தைக் கட்டி முடித்தபோது, அதாவது கி.பி.13ம் நூற்றாண்டில் இந்தக் கோபுரம் இன்று நாம் பார்ப்பதற்கும் அதிகமாகச் சாய்ந்த நிலையில் இருந்தது. 20ம் நூற்றாண்டிலும் கடந்த நூற்றாண்டிலும் சில சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதன் வழி இந்தக்கட்டிடத்தை ஓரளவு நிமிர்த்தியிருக்கின்றார்கள். ஆனாலும் இன்றும் இது சாய்ந்துதான் இருக்கின்றது. இந்தத் தன்மையே இதற்குத் தனிச்சிறப்பையும் அளித்திருக்கின்றது எனலாம்.
4
ஒரு பக்கம் சாய்ந்த வகையிலிருப்பதால் சாய்ந்த பக்கம் 55.86 மீட்டர் உயரமும் நேராக இருக்கும் பக்கத்திலிருந்து 56.67மீட்டர் உயரமும் கொண்டது பீசா கோபுரம். கோபுரத்தின் மொத்த எடை 14,500 மெட்ரிக் டன் ஆகும். தற்சமயம் இதன் சாய்ந்தபகுதி 3.99 பாகைச் சரிந்த வகையில் உள்ளது.
இந்தக் கோபுரத்தை வடிவமத்த கட்டிடக்கலைஞர் யார் என்பதில் ஆய்வாளர்கள் மத்தியில் சில குழப்பங்கள் இருந்தன. டியோட்டிசால்வி (Diotisalvi) என்ற கட்டுமானக் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான கிபி.12ம் நூற்றாண்டு அரிய கலைப்படைப்புதான் இந்த பீசா கோபுரம் என்பது ஆய்வுகளுக்குப் பின்னர் நிரூபணமானது. பீசா நகரிலிருக்கும் சான் நிக்கோலா கட்டிடத்தையும் இங்கிருக்கும் பாப்டிஸ்ட்ரியையும் வடிவமைத்தவரும் இவரே. கி.பி. 1173ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி தான் முதலில் இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கி.பி. 1198ம் ஆண்டில் இக்கோபுரம் கட்டப்பட்டு முதல் ஆலயமணி கோபுரத்தில் பொருத்தப்பட்டது. கி.பி. 1272ம் ஆண்டில் கியோவான்னி டி சிமோன் என்ற கட்டுமானக் கலைஞரின் மேற்பார்வையில் கட்டுமானப் பணி மேலும் தொடரப்பட்டது. ஆறு தளங்களைக் கடந்து ஏழாவது தளத்தையும் கட்டு முடித்து இந்தக் கோபுரம் 1319ம் ஆண்டில் இன்றிருக்கும் வடிவத்தைப் பெற்றது. கீழ்த் தளத்திலிருந்து மேல் தளம் வரை செல்ல 251 படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறுகலான பளிங்குப்படிக்கட்டுக்களில் ஏறித்தான் ஒவ்வொரு தளமாகச் சென்று கண்டு வரமுடியும்.
5
இன்றைய நிலையில் உலகம் முழுவதிலுமிருந்து அதிகமான சுற்றுப்பயணிகள் இங்கு வந்து கூடுகின்றனர். ஆண்டில் 365 நாளும் இங்குச் சுற்றுப்பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். மிக அதிகமாக உலக மக்களால் வந்து பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்லப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று இது என்றால் அது மிகையல்ல. பீசா கோபுரத்தின் உள்ளே சென்று வரக் கட்டணம் கட்டி டிக்கட் பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களை மட்டுமே காவல் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கின்றனர். கோபுரத்தின் அளவு சிறியதாக இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.
இந்தக் கோபுரத்தைக் கட்டி முடிக்க இரண்டு நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக கட்டுமானப் பணிகள் நடந்தன என்பதை நினைத்துப் பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கின்றது. இத்தாலியின் பீசா நகருக்குச் சிறப்பு சேர்க்கின்ற ஓர் அம்சம் என்று மட்டுமில்லாமல், இத்தாலிக்கும் ஒட்டு மொத்த ஐரோப்பாவிற்கும் புகழ் சேர்க்கும் சிறப்புச் சின்னமாக பீசா சாய்ந்த கோபுரம் திகழ்கின்றது.

Friday, June 2, 2017

90. அக்வின்க்கும் பண்டைய ரோமானிய நகரம், அதன் அருங்காட்சியகம் – பூடாபெஷ்ட், ஹங்கேரி

http://www.vallamai.com/?p=77290

முனைவர் சுபாஷிணி
பண்டைய ரோமானிய பேரரசு தெற்கே மத்தியத்தரைக்கடல் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி ஐரோப்பா முழுமைக்கும், இங்கிலாந்து, அயர்லாந்து என விரிந்த மிகப்பெரிய பேரரசாகத் திகழ்ந்தது. தன் ஆட்சி காலத்தில் ரோமானியப் பேரரசு தனது எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகளில் நகரங்களை நிர்மானித்தது. பண்டைய ரோமானிய நகரங்களின் எச்சங்களை ஐரோப்பாவின் நாடுகளில் இன்றும் ஆங்காங்கே காணலாம். அத்தகைய சிதலமடைந்த ஒரு பண்டைய நகரமே ஹங்கேரியின் தலைநகரமான பூடாபெஷ்ட் நகரிலிருக்கும் அக்வின்க்கும் (Aquincum).
as
அக்வின்க்கும் ரோமானியப் பேரரசின் போர்த்தளவாடங்கள் நிறைந்திருந்த ஒரு பகுதி. இங்கே வீரர்களின் குடியிருப்புப்பகுதியோடு மக்களின் வாழ்விடங்களும் இணைந்த வகையில் இந்த நகரில் அமைக்கப்பட்டன. ரோமானியப் பேரரசு தனது எல்லையை விரிவாக்கிக் கொண்டே செல்லும் போது எல்லைப்பகுதி நகரங்களாக அமைந்த நகரங்களில் ஒன்று என்றும் அக்வின்க்கும் நகரைக் குறிப்பிடலாம். ரோமானியப் படை வருவதற்கு முன்னர் இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் கெல்ட்டிக் இனக்குழுவின் ஏராவாசி (Eravisci) சமூக மக்கள். கி.பி.41 வாக்கில் இங்கு 6000 பேர் கொண்ட ரோமானியப் படைகள் இங்கு வந்து, நகரை அமைத்து, கி.பி.89 முதல் இங்கு ரோமானியப் படைவீரர்களின் குடும்பங்கள் தங்கும் நகரமாக இது உருவெடுத்தது. சிறு நகரமாக இருந்த இந்த ஊர் பனோனியா வெற்றிக்குப் பிறகு பனோனியா நிலப்பகுதியின் தலைநகராமக உருவெடுத்தது. இது நிகழ்ந்தது கி.பி 106ம் ஆண்டில். அச்சமயத்தில் இந்த நகரில் 30,000லிருந்து 40,000 மக்கள் வாழ்ந்ததாக குறிப்புக்கள் சொல்கின்றன.
அக்வின்க்கும் அருங்காட்சியகம் 1894ம் ஆண்டில் பொது மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. இதனை முதன் முதலில் 1778ம் ஆண்டில் பூடாபெஷ்ட் நகரில் திராட்சை தோட்டம் போடுவதற்காக நிலத்தை சீர்செய்யத் தொடங்கிய ஒரு விவசாயிதான், இப்பகுதியில் நிலத்துக்குக்கீழே தோண்டும் போது, ஒரு கட்டுமானப் பகுதி இருப்பதைக் கண்டுபிடித்து அரசுக்கு அறிவித்தார். பின்னர் இந்த நகரத்தின் ஏனைய பகுதிகள் படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும் இவை எதைச் சார்ந்தவை என அறியப்படாமலேயே இருந்தது. 1820ல் தான் இப்பகுதியில் முறையான தொல்லியல் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்டது. 1860 வாக்கில் ரோமானிய குளிக்கும் குளங்கள், நீர்த்தொட்டிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. 1876ல் அப்போதைய இளவரசர் இந்த அகழ்வாய்வுப் பகுதிக்கு வந்து இதனை பார்வையிட்டுச் சென்றிருக்கின்றார். 1881ல் இங்குள்ள அம்பிதியேட்டர் பகுதி முழுமையாக அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்டது. 1889ல் அக்வின்க்கும் அகழ்வாய்வு அறிக்கை முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டு உலகுக்கு இந்த நகர் பற்றிய செய்தி விரிவாக அறிமுகமானது. 1936ம் ஆண்டு ஒரு அருங்காட்சியகமும் இணைக்கப்பட்டு இங்கு கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
as1
இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்த பின்னர் வலது புறத்தில் காணப்படுவது ஒரு ஓவியனின் வீடு. இன்று காணப்படும் வடிவிலேயே கி.பி.2லும் பின்னர் மேலும் கி.பி.3லும் கட்டப்பட்ட வீடு இது. வீட்டின் வெளிப்புறம் தற்சமயம் புதுப்பிக்கப்பட்டு அக்காலத்தில் வீடு எவ்வாறு இருந்ததோ அதே நிலையில் காட்டப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் உள்ளே இது கட்டப்பட்ட, அதாவது இன்றைக்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தரைப்பகுதி, அறைகள், தரையில் அமைக்கப்பட்டுள்ள மொசைக் கல்வடிவம் ஆகியன இன்றும் அதன் நிலை கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஓவியனின் வீட்டில் வாசலில் நிலைப்பகுதி, உட்காரும் திண்ணை, உள்ளே நுழைந்ததும் வரவேற்பரை, வெவ்வேறு அறைகள், சமயலறை, உணவருந்தும் அறை, வெளிப்பகுதி என பிரித்து பிரித்துக் கட்டியிருக்கின்றார்கள். இன்று எப்படி ஒரு வீடு அமைந்திருக்கின்றதோ அதே வடிவில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாத வீட்டின் கட்டுமானத்தை இந்த கி.பி.2ம் நூற்றாண்டு ஓவியனின் வீடு காட்டுகின்றது.
ரோமானிய வரலாற்றை பின் நோக்கிப் பார்க்கும் போது இந்த நாகரிகம் ஏராளமான தெய்வ வடிவங்களையும் புராணங்களையும் தன்னுள்ளே கொண்டிருப்பதை விலக்கிப் பார்க்க முடியாது. வீனஸ், மார்ஸ், நெப்டியூன், டயானா, அப்போலொ, வோல்கானூஸ் என பல தெய்வங்கள் பண்டைய ரோமானிய பண்பாட்டை அலங்கரித்தன. அரக்கர்களும், தேவர்களும், தேவதைகளும் குட்டி பூதங்களும் கொடிய விலங்குகளும் நிறைந்தவையே ரோமானியப் புராணக் கதைகள். கற்பனைக்கு எல்லையே ஏற்படுத்திக் கொள்ளாத ஏராளமான புராணக் கதைகள் மக்களின் வழிபாட்டிலும் அங்கம் வகித்தன எனக் குறிப்பிடும் அதே வேளையில் மன்னனையும் ஒரு கடவுளாக ஏற்றி வைத்துப் புகழ்பாடி வழிபடும் வழக்கமும் ரோமானிய பண்பாட்டில் இருந்தது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். ரோமானிய பண்டைய புராணக்கதைகளை நினைவு படுத்தும் வகையில் ஒரு விளையாட்டு மைதானமும், புராணக்கதைமாந்தர்களின் நினைவினை ஏற்படுத்தும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியக வளாகத்திற்கு வரும் குழந்தைகள் மட்டுமன்றி பெரியோரும் இந்த விளையாட்டு மைதானத்தில் சற்று ஓய்வெடுக்கலாம்.


இந்த ரோமானிய குடியிருப்புப் பகுதியில் ஒரு பகுதியில் கசாப்புக் கடைக்காரரின் வீட்டின் அடித்தளம் அமைந்திருக்கின்றது. அதன் மறுபுறத்தில் மளிகைக்கடைக்காரரின் இல்லப்பகுதி இருக்கின்றது. ஒரு வீடு போன்ற வடிவமைப்பின் அடித்தளம் தான் இங்கு நாம் காண்பது. இந்த அடித்தளத்தைக் காணும் போது இந்த கடையின் முன்வாசல் பகுதி தெற்குப்புறமாகவும், மேற்குப் பகுதியில் சிறு கூடம் ஒன்று இருப்பது போலவும் அமைக்கப்பட்டதைக் காணமுடிகின்றது. வருகையாளர்களும் வாடிக்கையாளர்களும் சாலையிலிருந்து வரும் போது தெற்குப்புற வாசலின் வழியாக வந்து உள்ளே உள்ள பெரிய பகுதியில் தான் பொருட்களை வாங்கிச் சென்றிருக்க வேண்டும். கடையும் வீடும் ஒரே கட்டிடத்திற்குள் இருப்பது போல அமைந்திருக்கின்றார்கள். இம்மாதிரியான தொழில் செய்யும் இடமும் இல்லமும் ஒரே இடத்தில் இருப்பது பண்டைய நாகரிகங்களில் பொதுவாகக் காணப்படக் கூடிய ஒரு அம்சம் தான். ஆக, முன்புறம் உள்ள கடைப்பகுதியை அடுத்து தொடர்ந்தார்போல வருவது இல்லப்பகுதி. இங்கே சிறிய சிறிய அறைகள், சமயலறை போன்றவற்றைக் காணலாம். உடைந்தும் மிஞ்சி இருக்கும் சுவர்களில் இன்னமும் கூட ஆங்காங்கே சுவர் ஓவியங்களின் சில பகுதிகள் காணக்கிடைக்கின்றன.
as3
ரோமானிய பண்டைய நகரங்களில் நாம் காணக்கூடிய ஒரு பொது அம்சமாகத் திகழ்வது அம்பிதியேட்டர். கிரேக்கர்களைப் போலவே ரோமானிய பண்பாட்டிலும் கலையும் இசையும் பிரிக்கப்பட முடியாத அம்சங்களாகத் திகழ்ந்திருக்கின்றன. இதனைப் பிரதிபலிக்கும் சான்றுதான் அம்பிதியேட்டர் என்பது. அம்பிதியேட்டர் என்பது திறந்த வெளி மைதானத்தில் அடுக்கடுக்காக மேலே எழும்பும் வகையில் பார்வையாளர்கள் அமர செய்விக்கப்பட்ட அடுக்குகள் கொண்ட அறைவட்ட வடிவிலான மேடை. இந்த அறைவட்ட வடிவு இருக்கும் பகுதியில் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பார்கள். முன்னால் மேடையில் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியோ, நாடகமோ, நடனமோ, மல்யுத்தமோ ஏதாகினும் ஒன்று நடைபெறும் . இன்று நாம் பார்க்கும் காற்பந்து வளாகங்களின் முன்னோடிதான் அம்பிதியேட்டர் என்பது. அக்வின்க்கும் நகரிலும் ஒரு அம்பிதியேட்டர் கண்டுபிடிக்கப்பட்டது. அது இன்றும் நன்றாகப் பயன்படுத்தகூடிய வகையில் வெள்ளை நிறப்பளிங்கினால் வடிக்கப்பட்ட தளங்களுடன் கூடிய வகையில் அமைந்திருக்கின்றது. ஆகா.. என்ன கலைப்பாடு.. என பார்ப்போரை வியக்க வைக்கின்றது இதன் அமைப்பு.
as4
பண்டைய ரோமானிய நகரங்களின் மற்றுமொரு சிறப்பு அம்சம் பொதுக்குளியல் இடங்கள் எனலாம். சற்றே பெரிய நகரங்களில் மிகப்பெரிய குளங்களைக் காணமுடியும். அக்வின்க்கும் நகரிலும் இரண்டு குளியல் குளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்று நீர் இல்லாத நிலையில் இக்குளங்கள் இருந்தாலும், எவ்வாறு நீர் உள்ளே விடப்பட்டும் என்றும், எவ்வாறு நீர் வெளியே செல்லும், என்பதையும் நன்கு காணமுடிகின்றது. குளிர் நீருக்கு ஒரு குளமும் வெந்நீருக்கு ஒரு குளமும் என இரண்டு குளங்கள் இங்குள்ளன.
இவை மட்டுமன்றி இந்த பண்டைய ரோமானிய நகரில் வீரவிளையாட்டுக்கான மைதானம், இசைப்பள்ளி, பயிற்சிக்கூடங்கள் பூங்காக்கள் போன்றவையும் இருக்கின்றன. இன்றைக்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையான ஒரு நகரை நேரில் கண்டு அனுபவிக்கும் வாய்ப்பினை அக்வின்க்கும் அருங்காட்சியகமும் இந்த நகரின் வளாகமும் நமக்கு அளிக்கின்றன.