Sunday, June 21, 2015

43. அஞ்சல்தலை அருங்காட்சியகம், வாடூஸ், லிக்ஸ்டஸ்டைன்

இளம் பிராயத்தில், பள்ளியில் படிக்கும் காலங்களில், அஞ்சல் தலை சேகரிப்பு என்பது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்காகப் பலருக்கும் இருந்திருக்கும். எனது அனுபவத்திலும் அப்படியே. முன்பெல்லாம் இணைய வசதி என்பது இல்லாத சூழலில், ஈமெயில் என்பதே என்ன என்று தெரியாத காலகட்டத்தில், வீட்டில் பெற்றோருக்கு வருகின்ற எல்லா கடிதங்களையும் பார்க்கும் போது அதிலிருக்கும் அஞ்சல் தலைகள் தான் என் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தன. கடிதத்தில் இருக்கும் அஞ்சல் தலையை வெட்டி அதனை தண்ணீரில் லேசாக நனைத்து தாளிலிருந்து அகற்றி பின்னர் மிதமான வெயிலில் உலர்த்தி அஞ்சல் தலை சேர்க்கும் ஆல்பத்தில் சேர்த்து விடுவது என் வழக்கம். நம்மில் பலரும் இதே போல செய்தது இப்போது நினைவுக்கு வரலாம்.

அஞ்சல் தலைகளில் பல்வேறு வடிவங்கள் இருக்கின்றன. பொதுவாக நாம் பார்க்கும் பல அஞ்சல் தலைகள் சதுர வடிவமானவை என்றாலும், நீள் சதுரம், முக்கோணம், வட்டம், என்ற வடிவிலும் அஞ்சல் தலைகள் வெளியிடப்படுகின்றன. சிறப்பு வெளியீடுகளாக வருகின்ற அஞ்சல் தலைகள், அதாவது சுதந்திர தின வெளியீடு, முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் வெளியீடு, அல்லது முக்கிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு பற்றிய செய்தியை பரவலாக்கும் வகையில் வெளியிடப்படும் அஞ்சல் தலைகள் ஆகியவை  அஞ்சல் தலைகள் சேகரிப்போரின் கவனத்தை எப்போதுமே ஈர்க்கத் தவறுவதில்லை.


​அஞ்சல் அட்டைகள் - இதே அருங்காட்சியகத்தில்

உலகளாவிய அளவில் அஞ்சல் தலை சேகரிப்பு என்பது சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களாலும் விரும்பி மேற்கொள்ளப்படும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. தனி நபர் அஞ்சல் தலைகள் சேகரிப்பு என்பது ஒரு புறமிருக்க, அரசே அஞ்சல் தலைகள் சேகரிப்பிற்காக அருங்காட்சியகங்களை அமைத்து பராமரிப்பதும் உண்டு. அமெரிக்காவின் சில மானிலங்களிலும். கனடா, சுவிஸர்லாந்து, டென்மார்க், பாக்கிஸ்தான், எகிப்து, ஜெர்மனி, மோனாக்கோ, இந்தியா, ஜப்பான், ஹங்கேரி, ஃபின்லாந்து, இங்கிலாந்து மற்றும் சில நாடுகளிலும் அஞ்சல் தலைகளுக்கென்றே பிரத்தியேகமாக அருங்காட்சியகங்கள் இருக்கின்றன.  இதேபோல சுவிஸர்லாந்திற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் இருக்கும் சிறிய நாடான லிக்ஸ்டஸ்டைன் நாட்டின் தலைநகர் வாடூஸிலும் ஒரு அஞ்சல் தலை அருங்காட்சியகம் இருக்கின்றது.


​அருங்காட்சியக முகப்பு பகுதி

இந்த அருங்காட்சியகம் வாடூஸ் நகரின் மையச் சாலையிலேயே அமைந்திருக்கின்றது. 1930ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியம் முழுமை படுத்தப்பட்டு 1936ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. லிக்ஸ்டஸ்டைன் தேசிய அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் இது தனித்து இயங்கும் ஒரு அருங்காட்சியகமாகவே அமைந்திருக்கின்றது.



​அஞ்சல்தலை சேகரிப்புக்கள் வரிசையாக அலமாரியில்

இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமாக லிக்ஸ்டஸ்டைன் நாட்டில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளின் சேகரிப்புக்களே நிறைந்துள்ளன.  1912ம் ஆண்டு தொடக்கம் லிக்ஸ்டஸ்டைன் அரசால் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள் அனைத்தும் இங்கு சேகரித்து வரிசை வரிசையான காட்சிப் பலகைகளில் பொறுத்தி கண்ணாடி கதவுகள்  பாதுகாப்பாக வழங்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. அஞ்சல் தலை சேகரிப்புக்கள் மட்டுமன்றி இங்கு வைக்கப்பட்டிருக்கும் அஞ்சல் தலை தயாரிப்பு பணிகளோடு தொடர்பு கொண்ட கருவிகளும் இங்கு வரும் பார்வையாளர்களுக்குக் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாக அமைகின்றன.


​அஞ்சல்தலைகளில் சில..

இந்த அருங்காட்சியகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் http://www.postmuseum.li/ என்ற முகவரியில் முக்கிய தகவல்களைப் பெறலாம். நான் இந்த அருங்காட்சியகத்திற்கு இவ்வாண்டு மேமாதத்தில் ஒரு சனிக்கிழமையில் சென்றிருந்தேன். அருங்காட்சியகம் திறக்கும் நேரத்தை அறிந்து செல்வது ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். திங்கட்கிழமைகளில் இந்த அருங்காட்சியகம் திறப்பதில்லை.


​பழங்காலத்தில் கடிதம் கொண்டு வரும் குதிரை வண்டியின் ஓவியம்

சுவிஸர்லாந்து செல்பவர்கள் வாய்ப்பு கிடைத்து லிக்ஸ்டஸ்டைன் வந்தால் தவறாது இந்த அருங்காட்சியகம் சென்று வரவேண்டும். ஒரு தளத்தில் மட்டுமே சேகரிப்புக்களும் கருவிகளும் இருந்தாலும்  அஞ்சல் தலை தயாரிப்பு பற்றிய விரிவான விளக்கத்தை வழங்க இந்த அருங்காட்சியகம் தவறவில்லை.

சரி.. இந்தஅருங்காட்சியகத்திலிருந்து மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு அடுத்த வாரம் அழைத்துச் செல்கிறேன். காத்திருக்கவும்!.

No comments:

Post a Comment