Wednesday, May 28, 2014

31. மூஸியோ டி செரா (Museo de Cera), மட்ரிட், ஸ்பெயின்

முனைவர்.சுபாஷிணி 

​மெழுகுச் சிலைகளில் பிரபலமான அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரின் உருவத்தை வடித்து வைத்து ​இதனைக் காட்சிக்கு வைப்பதே இத்தகைய அருங்காட்சியகங்களின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு நாட்டின் சூழலிலும் அங்கே பிரபலமாகக் கருதப்படுவோர் இந்த உருவச் சிலை வடிவங்களில் இடம்பெறுகின்றனர். உலகப் பிரசித்தி பெற்ற மனிதர்களின் சிலைகளை உருவாக்கும் அதேவேளை உள்ளூர் அரசியல், சினிமா, சமூக, வரலாற்று நிகழ்வுகளில் முக்கியப் பங்கெடுத்தோர் இத்தகைய மெழுகு உருவச் சிலைகளாக இவ்வகை அருங்காட்சியகக் கூடங்களில் காட்சிக்கு நிற்பர். அர்சியல் தலைவர்களில் ஒபாமா, தற்போது இத்தகைய அனேக மெழுகு அருங்காட்சியகங்களில் காட்சி தருகின்றார். நடிகர்களில் ஆஞ்சலினா ஜூலி அவர் கணவர் நடிகர் ப்ராட் பிட் இருவரும் இதே வகையில் நான் பார்த்த வேறு மெழுகு அருங்காட்சியகங்களிலும் காட்சியில் இருக்கின்றனர். இதே போல காந்தியும். இரண்டு வெவேறு அருங்காட்சியகங்களில் காந்தியின் மெழுகுச் சிலையப் பார்த்திருக்கின்றேன்.

மூஸியோ டி செரா, காதலர் தினமாகக் கொண்டாடப்படும் பெப்ரவரி 14ம் தேதி 1972ம் ஆண்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. 2000 சதுர அடி விரிவான கட்டிடத்தில் இரண்டு மாடித்தளங்களில் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் அமைந்துளளது. எந்த அளவிற்கு வரலாற்று பிரபலங்களின் சிலைகள் இந்த அருங்காட்சியகத்தை அலங்கரிக்கின்றனவோ அதே அளவு பொழுது போக்கு அம்சங்களான காற்பந்து, சினிமா துறையைச் சார்ந்த பிரபலங்களின் சிலைகளும் இங்கு நிறைந்திருக்கின்றன.

பைரட் ஆஃப் கரீபியன்  ​(ஜூலை 2013)

பல பெண்களின் கனவு நாயகரான ஜோர்ஜ் க்ளூனி, ப்ராட் பிட் ஆகியோரும் இளைஞர்களின் கனவு தேவதைகளான ஆஞ்சலினா ஜூலி, பெனலோப் க்ரூஸ் போன்றோரும் இங்கு காட்சியளிக்கின்றனர். ஸ்பெயினில் இரண்டு உலகத் தரம் வாய்ந்த காற்பந்து குழுக்களான ரியால் மட்ரிட் குழுவின் பிரபலங்களும் எஃப்ஸி பார்ஸலோனா குழுவின் பிரபலங்களும் கூட இந்த அருங்காட்சியகத்தில் மெழுகு வடிவத்தில் உருவச் சிலைகளாக காட்சியளிக்கின்றனர்.

சில பிரபலங்கள் தங்கள் உருவச் சிலைகள் தயாராகி இங்கு காட்சிக்கு வைக்கப்படும் நிகழ்வு நடைபெறும்போது நேரில் மூஸியோ டி செரா வந்து சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் நடக்கின்றது. உதாரணமாக ரியால் மட்ரிட் காற்பந்து குழுவில் பிரபலமான போர்த்துக்கீஸியரான ரொனால்டோ, தனது உருவச் சிலை இந்த அருஙகட்சியகத்தில் இடம் பெறத் தயாரான வேளையில் அந்த நிகழ்வுக்கு நேரடியாக வந்து இவ்விழாவைச் சிறப்பு செய்தார் என்ற செய்தியையும் இணையத்தில் காணலாம்.


​அமெரிக்க ஜனாதிபதிகள்  ​(ஜூலை 2013)
​​
மெழுகுச் சிலைகள்​ (Wax sculptures)  என நாம் அறிந்திருக்கும் இவ்வகை உருவச் சிலைகள் ஐரோப்பாவில்  பண்டைய காலத்தில் அரச குடும்பத்தினரில் யாரேனும் இறக்கும் போது அவர்களை ஒத்த வடிவில் உருவம் அமைத்து மரியாதைச் செலுத்தும் நோக்கில் ஆரம்பகாலத்தில் உருவாகியது. மிகப் பழமையான இவ்வகை உருவச் சிலை எனத் தேடினால் இப்போது நமக்குக் கிடைப்பது இங்கிலாந்தின் லண்டன் நகரில் வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் இருக்கும் British royal wax effigies சேகரிப்புக்களைக் குறிப்பிடலாம். இதில் குறிப்பாக மன்னர் 3ம் எட்வர்ட் (1377) அவர்களின் மெழுகு உருவத்திலான உருவச் சிலையும் உள்ளது. 

​19ம் நூர்றாண்டில் மேடம் தூஸோ ​(Madame Tussauds) இத்துறையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவர். அவரது உருவாக்கங்களை காட்சிக்கு வைக்கும் வகையில் ஒரு அருங்காட்சியகத்தை அவர் நிறுவினார். அதுவே லண்டன் பேக்கர் ஸ்ட்ரீட்டில் இருக்கும் மேடம் தூஸோ மெழுகுச் சிலைஅருங்காட்சியகம். இங்கு நடப்பதற்குக் கூட இடம் கூட குறைவு. அந்த அளவிற்கு எல்லா பகுதிகளையும் நிறைத்துக் கொண்டு இவ்வகை சிலைகள் நிறைந்திருக்கின்றன. மேடம் தூஸோ அவர்களின் பெயரிலேயே இங்கிலாந்து தவிர்த்த பல இடங்களில் மெழுகுச் சிலை அருங்காட்சியகங்கள் உருவாகின. சில தனியார், அல்லது அரசாங்க முயற்சிகளினால் உருவான இவ்வகை அருங்காட்சியகங்களும் உலகின் பல நாடுகளில் காணக்கிடைக்கின்றன.

தி லாச்ட் சப்பர்  ​(ஜூலை 2013)
நாம் விரும்பும் பிரபலங்களை நேரில் சந்திக்க வேண்டும், அவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்து அது சாத்தியமல்ல என நினைக்கும் பலருக்கு இவ்வகை அருங்காட்சியகங்கள் மகிழ்ச்சி தருபவை. நேரில் இவ்வகை அருங்காட்சியகங்கள் செல்லும் போது மக்கள் ஆங்காங்கே தமக்கு பிடித்தோரின் சிலைகளின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாகச் செல்வதைக் கண்டு ரசிக்க முடியும். ஒரு வகையில் மக்களின் மகிழ்ச்சிக்காகத்தானே இவ்வகையிலான அருங்காட்சியகங்களும் அமைக்கப்படுகின்றன!

இத்தகைய அருங்காட்சியகங்கள் சென்று வரும் போது பலரை ஒரே இடத்தில் பார்த்த ஒரு திருப்தியும் ஏற்படும் :-)  அடுத்த பதிவில் உங்களை மற்றுமொரு நாட்டில் வேறொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். 

​உசாத்துணை​

Monday, May 19, 2014

30. மூஸியோ டி செரா (Museo de Cera), மட்ரிட், ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான மட்ரிட்டில் அருங்காட்சியகங்களுக்குக் குறைவில்லை. முன்னர் மட்ரிட் நகரில் அமைந்திருக்கும் அருங்காட்சியகங்களை அறிமுகப்படுத்தும் ஒரு பதிவில் சற்றே விரிவாகவும் விளக்கமாகவும் பொதுவான அறிமுகமாக மட்ரிட் நகர அருங்காட்சியகங்கள் பற்றிய சில தகவல்களை வழங்கியிருந்தேன். இந்தப் பதிவில் மட்ரிட் நகரில் உள்ள மற்றொரு அருங்காட்சியகத்திற்கு வாசகர்களான உங்களை அழைத்துச் செல்கின்றேன்.
இன்று நாம் செல்லவிருப்பது மட்ரின் நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மூஸியோ டி ஸெரா (Museo de Cera). வேக்ஸ் (மெழுகு) மூஸியம் என்றால் முதலில் நம் மணக்கண்னில் தோன்றுவது லண்டன் மாநகரில் இருக்கும் மேடம் தூஸோ வேக்ஸ் அருங்காட்சியகம் தான். ஆனால் லண்டனில் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் மெழுகினால் தயாரிக்கப்படும் உருவச் சிலைகள் இருக்கும் அருங்காட்சியகங்கள் பெருகி விட்டன. ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரிலும் ஒரு மெழுகுச் சிலை அருங்காட்சியகம் இருக்கின்றது. இதே போல ஒன்று தான் மட்ரிட் நகரில் இருக்கும் இந்த மூஸியோ டி ஸெரா.
mc1
அறிஞர் குழுவினரது சந்திப்பு ​(ஜூலை 2013)
ஏறக்குறைய 450க்கும் மேற்பட்ட மெழுகு உருவச்சிலைகள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. ஸ்பெயின் முழுமைக்குமுள்ள இவ்வகை அருங்காட்சியகங்களில் அதிகம் மெழுகு உருவச் சிலைகள் நிறைந்த ஒரு அருங்காட்சியகம் என்றால் அது இது மட்டும் தான். நகரின் மத்தியிலேயே இருப்பதால் மெட்ரோ ஸ்டேஷனை விட்டு இறங்கியதுமே நேராக அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து விடலாம்.
கட்டிட அமைப்பில் இந்த அருங்காட்சியகத்தை இரண்டு தளங்களாகப் பிரித்து அமைத்திருகின்றனர். முதலில் கட்டணம் செலுத்தி டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு வெளிவரும் போது நம்மை அழைத்துச் சென்று வழிகாட்ட சில ஊழியர்கள் இருக்கின்றனர். அருங்காட்சியகப் பகுதி மூன்று தனித்தனி பகுதிகளாக இருப்பதால் இந்த ஊழியர்களின் துணையோடு ஒவ்வொரு பகுதிக்கும் செல்வது சிறப்பு.
அச்சமூட்டும் ஒரு ரயில் பயணம், வானவெளிப்பயண சிமியூலேட்டர், அதன் பின்னர் மெழுகுச் சிலைகள் அருங்காட்சியகம் என்ற வகையில் மூன்று தனிப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றது இந்த அருங்காட்சியகம்.
நான் சென்ற போது முதலில் அச்சமூட்டும் ரயில் பயணம் உள்ள பகுதிக்குச் சென்று ரயிலில் பயணித்து குகைகளுக்குள் பயணம் செய்து காட்டு மிருகங்கள், பேய் பிசாசுகளின் உருவங்கள் போல செய்யப்பட்டிருந்த சிலைகளைப் பார்த்து ரசித்து முடித்து விட்டு பின்னர் வானவெளிப் பயண சிமியூலேட்டர் பயணம் மேற்கொண்டு இறுதியாக அருங்காட்சியகப் பகுதிக்கு வந்தேன்.
mc2
க்ளியோபாட்ரா (ஜூலை 2013)
ரயில் பயணத்தில் ஏனைய பார்வையாளர்களுடன் பயணிக்கும் போது குழந்தைகள் அச்சத்துடனும் குதூகலத்துடனும் கூச்சலிட்டு சத்தம் போட்டு சிரித்து மகிழும் போது நாமும் அந்தக் குழந்தைகளோடு குழந்தைகளாகி அவர்களைப் போல குதூகலித்து மகிழலாம். அதே போல வானவெளி பயண சிமியூலேட்டர் வாகனத்தில் உட்கார்ந்து அந்த சிமியூலேட்டர் நம்மை அழைத்துச் செல்லும் போது உண்மையில் நிலத்தில் தான் ஒரு வாகனத்திற்குள் அமர்ந்து இருக்கின்றோம் என்பதை மறந்து வானத்தில் பறப்பது போலவும், பல வின்வெளிக் கப்பல்கள் நம்மை தாக்க வருவது போல வர அங்கிருந்து தப்பித்து செல்ல நாம் முயற்சி எடுப்பது போலவும் மனம் ஒன்றித்துப் போய் இயங்க ஆரம்பித்து விடுகின்றோம். 15 நிமிடம் நீடிக்கும் இந்தப் பயணம் முடிந்து வெளியே வந்தால் .. ஆஹா.. ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தோம் என்று சொல்லி பெருமூச்சு விட்டு மகிழும் நிலைமையை உணர்வோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி .. அருங்காட்சியகம் பார்க்கத்தான் வந்திருக்கின்றோம். வானத்தில் வின்வெளிக் கப்பல் பயணம் மேற்கொள்ள அல்ல, என்பதை நம் மனம் நமக்கு ஞாபகப் படுத்தும் போது சிரித்துக் கொண்டே அடுத்தப் பகுதிக்குச் செல்வது தான் நிகழும்.
மெழுகுச் சிலை அருங்காட்சியகப் பகுதி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருப்பொருளுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உள்ளே முதலில் நுழையும் போது நம்மை வரவேற்பவை எகிப்திய பண்டைய நாகரிகத்தை விவரிக்கும் காட்சிகளே. இங்கே க்ளியோபாட்ரா, ஜூலியஸ் சீஸர், மார்க் அண்டனி உருவச் சிலைகள் தத்ரூபமாக இவர்கள் நம் கண் முன்னே இருந்து காட்சியளிப்பது போன்று அமைத்திருக்கின்றனர். அதனை அடுத்ததாக அரேபிய வரலாறு சொல்லும் பகுதி, அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகள் சிலவற்றை காட்சிப்படுத்திக் காட்டும் மெழுகுச் சிலைகள், அதன் கருப்பொருளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
mc3
​ஸ்பெயின் அரச குடும்பம் (ஜூலை 2013)

இந்த வரிசையில் நம் கண்களையும் கருத்தையும் கவரும் ஒரு பகுதி ஸ்பெயின் அரச குடும்பத்தினர் இருக்கும் ஒரு பகுதி. மன்னர் முதலாம் ஹுவான் கார்லோஸ், அரசியார் ஸோஃபியா, இளவரசர், இளவரசியார் – இவர்கள் நால்வருமே நம் கண் முன்னே புன்னகைப் பூத்த வண்ணம் எழிலாக நின்ற வண்ணம் நம்மை பார்த்தவாறு இருப்பது மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கின்றது.

mc4
உலகத் தலைவர்களது உருவச் சிலைகள் (ஜூலை 2013)
மற்றொரு பகுதியில் உலகத் தலைவர்கள் சிலரது சிலைகள் பல ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ளன, ஜெர்மனியின் தற்போதைய சான்ஸலர் திருமதி.மெர்க்கல், மஹாத்மா காந்தி, மறைந்த இந்தியப் பிரதமர் மஹாத்மா காந்தி, மறைந்த ப்ரிட்ட்ஷ் இளவரசியார் டயானா, யாசீர் அராஃபாட், தெரேசா அன்னையார் ஆகியோரது உருவச் சிலைகளை உதாரணமாக்ச் சொல்லலாம்.
மேலும் இங்குள்ள ஏனைய உருவச் சிலைகளைப் பற்றி அடுத்த பதிவில் காண்போமே!
தொடரும்….

Friday, May 2, 2014

29. லியானார்டோ அருங்காட்சியகம் (2), வின்ச்சி, இத்தாலி

முனைவர்.சுபாஷிணி 

மனித பரி​ணாம​ வளர்ச்சிக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஒரு பாலமாக அமைந்தவர்களில் லியோனார்டோவின் பங்கு அளப்பறியது. அவரது சிந்தனைகளில் உதித்த கருத்துகள் அனைத்தையும் தமது குறிப்பேட்டில் அவர் தொகுத்து வைத்ததனால் அவை இன்று நாம் அறிந்து கொள்ள உதவும் ஆவணங்களாகத் திகழ்கின்றன. தனது கண்டுபிடிப்புக்களில் சிலவற்றை லியோனார்டோ மாடல்களாகச் செய்தும் பார்த்திருக்கின்றார். பல கண்டுபிடிப்புகள் செயல்வடிவம் பெற்றதோடு அவை மென்மேலும் செம்மையாக்கப்பட்டு மனிதகுலத்தின் நாகரிக வளர்ச்சியின் பயன்பாட்டிலும் இடம்பெறுவதாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
இத்தாலியின் வின்ச்சி நகரில் உள்ள இந்த லியோனார்டோ அருங்காட்சியகம் இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கின்றது. ஒன்று நகர மையத்தில் இருக்கும் அருங்காட்சியகம். இங்கே லியோனார்டோவின் கையெழுத்துக் குறிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மாடல்கள் இந்த அருங்காட்சியகத்தை நிறைத்துள்ளன. இந்த மாடல்களை உருவாக்கியதில் பெரும் பங்கு IBM நிறுவனத்தைச் சாறும் என்ற குறிப்பும் அங்கே காணக் கிடைக்கின்றது.
suba 1
அருங்காட்சியகத்தின் உள்ளே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாடல் வடிவங்கள்
இதைத் தவிர்த்து வின்ச்சி நகர மையத்தைக் கடந்து ஏறக்குறைய 3கிமீதூரத்தில் லியோனார்டோவின் பிறந்த இல்லம் இருக்கின்றது. இதில் ஒரு கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே நவீன தொழில் நுட்பம் கொண்டு ஹோலோக்ராம் வடிவில் நம் கண் முன்னே லியோனார்டோ டா வின்சி தோன்றி தம்மை பற்றியும் தனது சிந்தனைகளை, தன் வாழ்க்கை வரலாறு என இத்தாலி மொழியிலும் ஆங்கிலத்திலும் கூறுவதைக் கேட்கலாம். இது நம் முன்னே லியோனார்டோ நின்று பேசுவதைப் போன்றதொரு உணர்வினை நமக்கு வழங்குகின்றது. இந்தக் கண்காட்சியகத்தில் அவரது இல்ல்லத்தின் கூடம், வாசல் பகுதி, சமையலறை, தூங்கும் அறை போன்ற பகுதிகளில் விளக்கக் குறிப்புக்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.
லியோனார்டோவின் வாழ்க்கைக் குறிப்பை அறிந்து கொள்வதும் இந்த அருங்காட்சியகப் பதிவிற்கு உதவும் எனக் கருதுகின்றேன்.1452ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி ப்ளோரன்ஸ் நகரில் இருக்கும் வின்ச்சி நகரில் பிறந்தவர் இவர். இவரைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் வசாரி (Vasari) அவர்களது குறிப்புகளிலிருந்து கிடைக்கின்றன. இது மிக விரிவானதொரு குறிப்பு. இக்குறிப்புகளில் காணப்படும் தகவலின் படி லியோனார்டோ ஒரு சைவை உணவு உண்பவர் என்று அறியமுடிகின்றது. கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் பறவைகளை வாங்கி அவற்றை கூண்டிலிருந்து சுதந்திரமாகப் பறக்க விடுவாராம். சுதந்திர தாகம் அவர் மனதை ஆக்கிரமித்திருக்க வேண்டும் என்றும் விலங்குகள் போன்ற ஏனைய உயிரினங்களின் மீதும் அவற்றின் சுதந்திர வாழ்க்கையின் மேலும் அவருக்கு ஓர் ஈடுபாடு இருந்திருக்க வேண்டும் என்றும் இதனை அறிந்து கொள்ளும் போது எண்ணத் தோன்றுகின்றது.
இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை; குழந்தைகளும் இல்லை. அதிகமான நண்பர்கள் இவருக்கு இருந்திருக்கின்றனர். அதில் ஆண்களும் சில குறிப்பிடத்தக்க என்ணிக்கையில் பெண்களும் அடங்குகின்றனர்.
ஆரம்ப காலத்தில் இவரது புகழ் இவரது கலைப்படைப்புக்களுக்காகவே என அமைந்தது. ஐரோப்பிய கலாச்சரத்திற்குப் புகழ்ச் சேர்க்கும் பல சித்திரங்கள் லியோனார்டோவின் கைவண்ணத்தில் உருவானவை. உதாரணமாக Virgin and Child with St. Anne, John the Baptist,Virgin of the Rocks, Adoration of the Magi, The Last Supper, Mona Lisa ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஓவியராகவும் சிற்பியாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட லியோனார்டோ உடற்கூறுகளை ஆராயும் கலையையும் கற்க எண்ணம் கொண்டு Andrea del Verrocchio என்ற சிற்பக்கலை ஆசிரியரிம் பிரத்தியேகப் பயிற்சி எடுத்துக் கொண்டார். இந்தப் பயிற்சிகள் அவருக்கு மனித உடலின் பாகங்களை ஆராய்ந்து அவற்றை தனித்தனியே விரிவாக விவரிக்கும் வகையில் படைப்புகளை உருவாக்க உதவின. உடலின் அனைத்து பாகங்களையும் மருத்துவர்களைப் போல வெட்டி ஆராய்ந்து அதன் உட் பகுதிகள், தோல், தசை, நரம்பு நாளங்கள், என உடலின் பாகங்களை ஆராய்ந்து அதன் குறிப்புக்களை இவர் உருவாக்கியிருக்கின்றார்.
suba 2
லியோனார்டோவின் கையெழுத்துக் குறிப்புடன் கருப்பையில் வளரும் குழந்தையின் ஆரம்ப நிலைவடிவம்.. ஏறக்குறைய 1510 வாக்கில் எழுதப்பட்ட குறிப்பு (இது இங்கிலாந்தில் உள்ள Royal Library, Windsor Castle லில் உள்ளது)
இவர் ஒரு சிறந்த ஓவியர் என்ற காரணத்தினால் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை வெட்டி அதன் உட்பகுதிகளை வரைந்து குறிப்பெடுக்கும் அனுமதி இவருக்கு அரசினால் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஃப்ளோரன்ஸ் நகரில் இருந்த Hospital of Santa Maria Nuova, மருத்துவமனையிலும் பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மிலான், ரோம் நகர மருத்துவமணைகளிலும் இவ்வகை வாய்ப்புக்கள் அவருக்கு அமைந்தன. மருத்துவர்களுடன் இணைந்து 1510-1511ம் ஆண்டு வாக்கில் ஏறக்குறைய உடல் கூறுகளை விளக்கும் 240 ஓவியப்படைப்புகளை
​ ​
உருவாக்கியிருக்கின்றார். இக்கால நிலை போல கேமராவில் புகைப்படம் எடுப்பதோ, வீடியோ பதிவு செய்வதோ அமையாத காலகட்டம் அது. சித்திரங்களின் வழியே தான் இவ்வகை மருத்துவ குறிப்புகள் உருவாக்கம் பெற்றன. இந்த மருத்துவ ஆவணப் படைப்புக்களை உருவாக்கியோர் வரிசையில் லியோனார்டோவின் பங்களிப்பு சிறப்பிடம் பெறுகின்றது என்பதில் மறுப்பேதுமில்லை.
​இதைத் தவிர்த்து லியோனார்டோவின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் சார்ந்த சிந்தனைகள் நம்மை வியக்க வைப்பன. ​ பாலம் அமைக்கும் என்ஜீனியரிங் அடிப்படைகள், போர்க்கருவிகளின் இயந்திரப் பகுதி, இசைக்கருவிகள், விமானம் போன்ற பறக்கும் கருவி, வீட்டு பயன்பாட்டு கருவிகள் என எண்ணிக்கையில் உயரும் வகையில் இவரது கண்டுபிடிப்புக்கள் அமைந்தன.
suba 3
பறவைகளின் பறக்கும் முறைகளை விவரிக்கும் குறிப்புக்கள். இதன் வழி பறக்கும் கருவி உருவாக்கம் பற்றி லியோனார்டோவின் குறிப்புக்கள் அடங்கிய பக்கம்
​லியோனார்டோவின் அசாதாரண திறமை அவரது புகழ் உயரக் காரணமாக அமைந்தது. ​இத்தாலி மட்டுமன்றி ஐரோப்பாவில் இவர் புகழ் பரவியது. இத்தாலியின் பல நகரங்களில் இவருக்குச் சிற்பங்கள் உருவாக்கும் பணிகள் அமைந்து பள்ளிகளையும் அமைத்து நடத்தி வந்தார். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஐரோப்பாவின் பல இடங்களிலிருந்து இவரிடம் சித்திர சிற்பக்கலையைக் கற்றுக் கொள்ள மாணவர்கள் அமைந்திருந்தனர். ப்ரான்ஸ் மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸ் லியோனார்டோவின் புகழை அறிந்து தனது அரண்மனைக்குச் சிறப்பு விருந்தினராக இவரை அழைத்திருந்து சிறப்புச் செய்தார். நாளடைவில் இவர்களது நட்பு மிக நெருக்கமாக வளர அரசரின் பிரத்தியேகச் சிறப்பு சிற்பக் கலைஞர் என்ற பட்டமும் வழங்கி கௌரவித்ததோடு தம்முடனேயே லியோனார்டோ இருக்கும் படி ஏற்பாடுகளையும் செய்தார் மன்னர். லியோனார்டோ தம் முதுமையில் இறந்த போதும் மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸின் அரவணைப்பில் இறந்ததாக குறிப்பும் ஒரு சித்திரப் படைப்பும் இருக்கின்றது.
suba 4
1818 -ல் ஓவியக் கலைஞர் இங்க்ரெஸ் உருவாக்கிய படைப்பு. மன்னர் முதலாம் ஃப்ரான்ஸிஸின் கைகளில் லியோனார்டோவின் இறுதி மூச்சு செல்வதை உருவகப்படுத்தும் ஓவியம்
இத்தாலியில் சித்திரக் கலைஞர்களின் வாழ்க்கை குறிப்பை தேடி பதிந்து வைத்த பெருமை ஜியோர்ஜியோ வசாரியையே சாரும். டான் ப்ரவ்னின் இன்ஃபெர்னோ நூலில் இந்த வசாரி பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே வருவதை இந்த நாவலை வாசித்தவர்கள் அறிந்திருக்கலாம். வசாரி தனது Lives of the Artists நூலில் லியோனார்டோவை அறிமுகப்படுத்தும் பகுதியில் கீழ்க்காணும் வாசகத்தைக் குறிப்பிடுகின்றார்.
In the normal course of events many men and women are born with remarkable talents; but occasionally, in a way that transcends nature, a single person is marvelously endowed by Heaven with beauty, grace and talent in such abundance that he leaves other men far behind, all his actions seem inspired and indeed everything he does clearly comes from God rather than from human skill. Everyone acknowledged that this was true of Leonardo da Vinci, an artist of outstanding physical beauty, who displayed infinite grace in everything that he did and who cultivated his genius so brilliantly that all problems he studied he solved with ease.
—Giorgio Vasari
​எத்தனையோ மனிதர்கள் பிறக்கின்றோம்.. பின்னர் இறக்கின்றோம். நித்தம் வாழும் நிலையை உருவாக்கிக் கொள்ளும் மனிதர்கள் காலம் கடந்தும் மனித குலத்தினால் நினைத்துப் பார்க்கும் நிலையை அடைவர். லியோனார்டோ டா வின்சி இந்த வகையில் இடம்பெறுபவர்!
இன்று மே மாதம், 2ம் தேதி 1519ம் நாள் லியோனார்டோ இவ்வுலகை விட்டு மறைந்தார். லியோனார்டோ என்னும் இப்புதுமைச் சிற்பிக்கு என் அஞ்சலிகள்!
உசாத்துணை: